சினிமா

‘Lights on idea’- பிரதமரின் வேண்டுகோள் குறித்து பேசிய வேலைக்காரன் பட இயக்குநர்!

webteam

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகரிப்பதைத் தடுக்க, 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று காலை 9 மணிக்கு மூன்றாவது முறையாக மீண்டும் காணொலி மூலம் மக்களிடம் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார் பிரதமர் மோடி.

அதில், “ஊரடங்கை மதித்து நடக்கும் நாட்டு மக்களுக்கு நன்றி, நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராக யுத்தம் நடத்தியதற்கு நன்றி. இந்திய மக்கள் ஊரடங்கிற்கு உலகளவில் முன்னுதாரணமாகி இருக்கிறது. வீட்டிலிருந்தாலும் நாம் அனைவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளார். வீட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் இறைவனின் வடிவம்” என்றார்.

மேலும், “ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடம் வீட்டின் விளக்குகளை அணைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும். 9 நிமிடங்கள் விளக்கு ஏற்றும் போது, அமைதியாக இருந்து நாட்டு மக்கள் குறித்து சிந்தியுங்கள். செல்போன் மூலமாகவும் 9 நிமிடங்கள் ஒளியேற்ற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

இதனிடையே இதேபோல் விளக்குகளை ஒளிர விடும் ஒருகாட்சி வேலைக்காரன் படத்திலும் இடம் பெற்று இருந்தது. பலரும் மோடியின்
வேண்டுகோளையும், வேலைக்காரன் படக்காட்சியையும் இணைத்து மீம்ஸ் போட்டனர். இது நேர்மறையான எண்ணங்களை உருவாக்கும்
முறை என பதிவிட்டனர். இப்படி கலவையான விமர்சனங்கள் பெற்று வந்த பிரதமரின் ஐடியா குறித்து வேலைக்காரன் படத்தின் இயக்குநர்
மோகன்ராஜா ட்வீட் செய்துள்ளார். அதில்,

இந்த நெருக்கடி நிலையை வெல்வதற்கான தீர்வுக்காகவே நாம் அனைவரும் ஏங்குகிறோம். விரைவில் அதைப் பெறுவோம் என நம்புவோம். ஆனால் தற்போதைய தேவை நம்முடைய நேர்மறையான எண்ணங்களே. அதைத்தான் பிரதமரும் நம்மிடம் எதிர்பார்க்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.