சினிமா

மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பட படப்பிடிப்பு பிப்ரவரியில் ஆரம்பம்

மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பட படப்பிடிப்பு பிப்ரவரியில் ஆரம்பம்

webteam

மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்க உள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் 'சீமராஜா'. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து, தான் முதன்முதலாகத் தயாரித்த ‘கனா’ படத்தில் சிவகார்த்திகேயன் சிறிய வேடத்தில் நடித்தார். அருண்ராஜா காமராஜ் இயக்கிய இந்தப் படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் ஆகியோர் நடித்தனர்.

இதையடுத்து தற்போது, ராஜேஷ் இயக்கத்தில் நயன்தாராவுடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் அண்மையில் வைரலாகியது.

இதனிடையே விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான‘இரும்புத்திரை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மித்ரன். சமந்தா, அர்ஜூன் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். விஷால் தயாரிப்பில் உருவான இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இதைத்தொடர்ந்து, இயக்குநர் மித்ரனுடன் சிவகார்த்திகேயன் அடுத்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கடந்த நவம்பர் மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இத்திரைப்படத்தை '24ஏஎம் ஸ்டூடியோ நிறுவனம்' தயாரிக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாக நம்பத்தகுந்த ஆதாரங்கள் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். நடிகர் அர்ஜூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.