கந்துவட்டிப் பிரச்னைக்கு அரசு அதிகாரிகள் மேற்பார்வையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்குநர் ஜனநாதன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான சசிக்குமார் உறவினர் அசோக்குமார், சசிக்குமாரின் தயாரிப்பு நிறுவனத்தில் இணை தயாரிப்பாளராக பணிபுரிந்தவர். இவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்த கடிதத்தின் மூலம் அன்புச்செழியனிடம் கடன் பெற்றதும், அன்புச்செழியன் அவரை மிரட்டியதும் தெரியவந்தது. இந்த கடிதத்தை கைப்பற்றிய காவல்துறையினர், அன்புச்செழியன் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து பேட்டியளித்த சுசீந்திரன், கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட அசோக் குமாரின் மரணமே கடைசியாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். அவரைத்தொடர்ந்து பேசிய இயக்குநர் ஜனநாதன், “கந்துவட்டி பிரச்னையை சரிசெய்ய அரசு அதிகாரிகள் மேற்பார்வையில் நடவடிக்கை எடுப்பது சரியாக இருக்கும். ஏனெனில் பாதிப்படைந்தவர்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் சொல்லத் தயங்குவதை கூட, பொதுவான அரசு அதிகாரி என்றால் அவரிடம் கூறுவார்கள்” என்று தெரிவித்தார்.