janhvi kapoor peddi web
சினிமா

பெத்தி| அளவுக்கதிகமான கவர்ச்சி காட்சிகள்.. கடும் எதிர்ப்பிற்கு பின் இயக்குநர் எடுத்த முடிவு!

பெத்தி படத்தில் ஜான்வி கபூர் காட்சிகளில் இருந்த தேவையற்ற கவர்ச்சிக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், அக்காட்சிகளை நீக்குவதாக இயக்குநர் புஜ்ஜி பாபு சனா பதிவிட்டுள்ளார். மேலும் அசௌகரியங்களுக்கு மன்னிப்பும் கேட்டுள்ளார்.

Rishan Vengai

ராம் சரண், ஜான்வி கபூர் நடித்த ‘பெத்தி’ படம் ஜூன் 4 வெளியானதும், ஜான்வி கபூரை வெறும் கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தியதாக கடும் எதிர்ப்பு எழுந்தது. சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் அதிகரித்த நிலையில், பெண்களை அவமதிக்கும் வகையிலான தேவையற்ற கவர்ச்சி காட்சிகளை நீக்க முடிவு செய்ததாக இயக்குநர் புஜ்ஜி பாபு அறிவித்து மன்னிப்பும் கேட்டுள்ளார்.

ராம் சரண், ஜான்வி கபூர், சிவராஜ்குமார் நடிப்பில் புஜ்ஜி பாபு சனா நடித்துள்ள படம் `பெத்தி'. இப்படம் ஜூன் 4ம் தேதி வெளியானநிலையில், படத்தில் ஜான்வி கபூரை வெறும் கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தியிருப்பதாக இயக்குநர் மீது கடும் விமர்சனம் எழுந்தது. சமூகவலைதளங்களிலும் பெத்தி படத்தின் மீதும், இயக்குநர் மீதும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

janhvi kapoor peddi

இந்தசூழலில் கடும் விமர்சனங்களுக்கு இடையே படத்தில் உள்ள தேவையற்ற கவர்ச்சிக் காட்சிகளை நீக்குவதாகவும், பெண்கள் மீது மதிப்பு இருப்பதாகவும், அசௌகரியத்திற்கு மன்னிப்பு கேட்பதாகவும் எக்ஸ்தளத்தில் இயக்குநர் புஜ்ஜிபாபு பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவிட்டிருக்கும் பதிவில், "ஒரு திரைப்படப் படைப்பாளியாக, சினிமா பார்வையாளர்களை மகிழ்விக்க வேண்டும், அவர்களுக்கு உத்வேகம் அளிக்க வேண்டும், மேலும் அவர்களுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்று நான் நம்புகிறேன். அது ஒருபோதும் யாரையும் சங்கடமாகவோ அல்லது அவமதிக்கப்பட்டதாகவோ உணர வைக்கக்கூடாது. 'பெத்தி' திரைப்படத்தின் சில காட்சிகள் குறித்த கருத்துக்களை நாங்கள் கேட்டறிந்து, அவற்றை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளோம்.

திரையிலும் சரி, நிஜத்திலும் சரி, பெண்கள் மீது எனக்கு எப்போதுமே மிகுந்த மரியாதை உண்டு. எந்தவொரு பெண் கதாபாத்திரத்தையும் ஒரு பொருளாகக் கருதுவதோ அல்லது அவமதிப்பதோ எங்கள் நோக்கமாக ஒருபோதும் இருந்ததில்லை. திரைப்படத்தின் ஏதேனும் ஒரு பகுதி அவ்வாறு உணரப்பட்டிருந்தால், அந்த உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம், எழுப்பப்படும் கவலைகளைப் புரிந்துகொள்கிறோம், மேலும் மனப்பூர்வமாக மன்னிப்புக் கோருகிறோம்.

கருத்துக்களை மதிப்பாய்வு செய்த பிறகு, சம்பந்தப்பட்ட பகுதிகளில் மாற்றங்களைச் செய்ய நாங்கள் முடிவு செய்துள்ளோம். பார்வையாளர்களுடனான தொடர்பின் மூலமே சினிமா வளர்கிறது. கதைசொல்லிகளாகிய எங்களுக்கு, மாறிவரும் கண்ணோட்டங்களையும் உணர்வுகளையும் கவனத்தில் கொள்ளும் பொறுப்பு உள்ளது.

ஒவ்வொரு பெண்ணும் மதிக்கப்படவும், போற்றப்படவும், கண்ணியத்துடன் சித்தரிக்கப்படவும் தகுதியானவர். வலிமையான கதாபாத்திரங்களைக் கொண்டாடும் மற்றும் அந்த விழுமியங்களை நிலைநிறுத்தும் கதைகளைச் சொல்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

தங்கள் கருத்துக்களை நேர்மையாகவும் உண்மையாகவும் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நன்றி" என பதிவிட்டுள்ளார்.