”விருதுகள் வென்று குவித்தாலும் ‘நான்’ என்கின்ற அகந்தை அற்றப் பணிவால் இன்னும் நூறு உலக விருதுகள் உன் வீட்டுக் கதவைத் தட்டும் தனுஷ்” என்று நடிகர் தனுஷ் பிறந்தநாளில் வாழ்த்துகள் கூறி அறிக்கை வெளியிட்டிருக்கிறார் இயக்குநர் பாரதிராஜா.
நடிகர் தனுஷ் இன்று தனது 38-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத் திறமைகளைக் கொண்ட தனுஷ் இதுவரை நான்கு தேசிய விருதுகளை வென்றிருக்கிறார். இன்று அவரது பிறந்தநாளையொட்டி ரசிகர்களும், திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில், ’இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, “திரையில் தோன்றும் ஒரு சில கதாபாத்திரங்கள் நம்மையும் அறியாமல் நமக்குள் ஊடுருவி நம் உறர்வுகளோடு உறவோடு பின்னப்பட்டதாய் அமைந்துவிடும்.
ஆனால். கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நபரின் உண்மையான குணநலன்கள் நிஜ வாழ்க்கையில் முற்றிலும் நேர்மாறாக இருப்பதைக் கண்டு நாம் அதிர்ச்சியில் உறைந்து விடுவதுண்டு. நிஜ வாழ்க்கையில் எப்படியோ, அதை திரையிலும் பிரதிபலிப்பவர்கள் ஒரு சிலரே. அதில், உன்னை நான் முதன்மையானவனாகப் பார்க்கிறேன்.
எளிமை, தன்னடக்கம், விருதுகள் வென்று குவித்தாலும் ‘நான்’ என்கின்ற அகந்தை அற்றப் பணிவு, சிறந்த கலை நுட்ப அறிவு, இது போதும் டா... இன்னும் நூறு உலக விருதுகள் உன் வீட்டுக் கதவைத் தட்டும். பேரன்புமிக்க ’தங்க மகன்’ தனுஷ் இன்றைய நன்நாளில் எல்லா வளங்களும் பெற்று சீருடன் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்” என்று பெருமையுடன் வாழ்த்தியிருக்கிறார்.