சினிமா

பாட்ஷா முதல் ஷோ... கையில் ஹெல்மெட்டுடன் அஜித் - தியேட்டர் அனுபவம் பகிர்ந்த இயக்குநர் விஜய்

webteam

இன்னும் சில நாட்களில் தியேட்டர்கள் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட திரையரங்குகள் தமிழகத்தில் இன்னமும் திறக்கப்படவில்லை. ஓடிடி தளங்களில் திரைப்படங்கள் வெளியானாலும், தியேட்டரில் சென்று படம் பார்க்கும் அனுபவமே தனியானதுதான். டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியிட்டுவரும் தியேட்டர் லவ் பகுதியில் இயக்குநர் விஜய் தன்னுடைய தியேட்டர் அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.

நான் சிறு வயதில் பல படங்களை ரிலீசுக்கு முன்னதாகவே பிரிவியூ தியேட்டரில் பார்த்துவிடுவேன். என் அப்பா தயாரிப்பாளர் என்பதால் படம் வெளியாவதற்கு முன்பே படம் பார்க்க வாய்ப்பு எனக்கு கிடைக்கும். மைக்கேல் மதன காமராஜன் படத்தை என்னால் மறக்கவே முடியாது. மீனா பிரிவியூ தியேட்டரில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோருடன் சேர்ந்து அந்த படத்தை பார்த்தேன். அப்போது நான் சிறுவன். ஆனால் ஒவ்வொரு சீனுக்கும் சிரித்து சிரித்து ரசித்தது இன்னமும் நினைவிருக்கிறது.

படம் நிச்சயம் வெற்றி பெறும் என அப்போது எல்லாரும் பேசிக்கொண்டார்கள். அந்தப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். ஏனென்றால் அன்று தான் நான் ரஜினிகாந்த் சாருடன் கைகுலுக்கினேன். நாம் தனியாக தியேட்டர் சென்று படம் பார்த்த திரைப்படம் பாட்ஷா. ஆல்பர்ட் தியேட்டரில் நண்பர்களுடன் அந்தப்படத்தை பார்த்தேன். திரையரங்கமே திருவிழாகோலமாக இருந்தது. இன்னும் ஒரு ஸ்பெஷல் என்னவென்றால், அந்த ஷோவுக்கு அஜித்சாரும் வந்தார். கையில் ஹெல்மெட்டுடன் படிகளில் நடந்து சென்றார். அவரை சுட்டிக்காட்டி அவர்தான் அஜித். அவர் அமராவதி என்ற படத்தில் நடித்துள்ளார் என என் நண்பர்களிடம் சொன்னேன். ஆனால் என்னுடைய படங்களை நான் தியேட்டரில் பார்ப்பதில்லை. ஆனால் தியேட்டருக்கு விசிட் அடித்து ரசிகர்களின் மனநிலையை தெரிந்துகொள்ள விரும்புவேன்.

கிரீடம் படம் வெளியான அன்று பதட்டமாக தியேட்டருக்கு வெளியே நின்றது என் நினைவில் இருக்கிறது. இன்று நாம் வீட்டில் இருந்தே திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் திரையரங்குகளுக்கு நிகராகாது. திரையரங்குகள் உணர்ச்சிகரமானது. ஒரு நகைச்சுவை படத்தை கூட்டத்தோடு ரசித்து பார்ப்பது அலாதியானது. திரையரங்கில் படம் பார்க்கும் அனுபவத்தை வேறு எதாலும் கொடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.