ராயன் தேசிய விருது குறித்து தனுஷ் பேச்சு x
சினிமா

’கர்ணன், புதுப்பேட்டை போன்ற படங்களுக்கு தேசிய விருது கிடைக்கலயே..’ ராயன் குறித்து மனம்திறந்த தனுஷ்!

ராயனை விட என்னுடைய சிறந்த படங்களான கர்ணன், புதுப்பேட்டை போன்ற படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதபோது ஏன் யாரும் கேட்கவில்லை என தனுஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Rishan Vengai

தேசிய விருது பெற்ற ‘ராயன்’ குறித்து எழும் விமர்சனங்களுக்கு பதிலளித்த தனுஷ், இந்த விருது தானாக கிடைத்த பெருமை என கூறியுள்ளார். தமிழனாக மேலும் இரண்டு தேசிய விருதுகள் பெற்றிருப்பது பெருமை என்ற அவர், ராயனை விட ‘புதுப்பேட்டை’, ‘மயக்கம் என்ன’, ‘மரியான்’, ‘வடசென்னை’, ‘கர்ணன்’ போன்ற படங்கள் விருதுக்குத் தகுதியானவை என்றார். சில விஷயங்கள் முயன்றாலும் அமையாது, இம்முறை அமைந்தது என விளக்கினார்.

ராயன் திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதிலிருந்தே, அப்படம் குறித்து பல்வேறு கருத்துகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ராயன் படத்துடன் வெளியான மஹாராஜா, அமரன் போன்ற படங்களுக்கான வரவேற்பு ரசிகர்களிடையே அதிகமாக இருந்த நிலையில், அப்படங்களை கடந்து ராயன் படத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டது பேசுபொருளாக மாறியது.

ராயன்

இந்நிலையில் தான் ராயன் படத்திற்கு தேசிய விருது கொடுக்கப்பட்டது குறித்து சமீபத்திய நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், “ராயன் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. அந்தவருசம் அந்தப்படத்தை விட பல தகுதியான படங்கள் நிச்சயமாக இருக்கிறது. அந்தப்படத்திற்கான ரசிகர்கள் அதற்கான அதிருப்தியை வெளிப்படுத்தினர், அதை நான் முழுமையாக மதிக்கிறேன். ஆனால் ராயன் திரைப்படத்துக்கு தேசிய விருது தானாக கிடைத்தது.

ராயன் படத்தை விட புதுப்பேட்டை, மயக்கம் என்ன, மரியான், வடசென்னை, கர்ணன் போன்ற பல படங்கள் தேசிய விருதுக்குச் தகுதியானவை. சில விஷயங்கள் எவ்வளவு முயன்றாலும் அமையாது. இந்த முறை அமைந்தது, விருது கிடைத்தது. இந்தப் படத்திற்கு ஏன் தேசிய விருது என்று கேட்பவர்கள், அந்த படங்களுக்கு ஏன் தேசிய விருது கொடுக்கவில்லை என கேட்கவில்லை. தமிழனாக எனக்கு மேலும் 2 தேசிய விருது கிடைத்துள்ளது பெருமை. தட்டிவிடாமல் என்னை தட்டிக்கொடுங்கள்” என்று பெரியபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் நடந்த ரத்த தான முகாமில் நடிகர் தனுஷ் பேசியுள்ளார்.