சினிமா

தனுஷ் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை சிநேகா

webteam

தனுஷை வைத்து இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ‘எதிர்நீச்சல்’ படத்தை இயக்கியவர் இயக்குநர் துரை செந்தில் குமார். அடுத்ததாக நடிகர் தனுஷை வைத்து ‘கொடி’யை இயக்கினார். இந்தப் படதில் இடம்பெற்ற நடிகை த்ரிஷாவின் எதிர்மறையான கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது. கதை அம்சத்திலும் வசூல் ரீதியாகவும் இந்தப் படம் தனுஷுக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி தந்தது.

இந்நிலையில் தனுஷை வைத்து இயக்குநர் துரை செந்தில் குமார் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தலைப்பிடப்படாத இப்படத்தில் தனுஷ், தந்தை மற்றும் மகன் வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. சத்யஜோதி தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகை சிநேகாவும் நடிக்க உள்ளார். 2006ம் ஆண்டு வெளியான ‘புதுப்பேட்டை’ திரைப்படத்துக்கு பிறகு தனுஷுடன் மீண்டும் சினேகா இணைந்து நடிக்கவுள்ளார். 

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. படப்பூஜை தொடர்பான புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்புகைப்படங்களை பகிர்ந்து பலரும் திரைப்படத்துக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் ‘அசுரன்’ படப்பிடிப்பிலும் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.