சினிமா

'இரண்டாவது நேரடி தெலுங்கு படம்...' - தனுஷ் குறித்து அடுத்த அப்டேட்

நிவேதா ஜெகராஜா

சேகர் கம்முலாவுடன் தனுஷ் இணைந்துள்ள முதல் நேரடி தெலுங்கு படம் 'பான்-இந்தியா' படமாக உருவாக இருக்கிறது. இந்த நிலையில், தனது இரண்டாவது தெலுங்கு படத்தில் தனுஷ் கமிட் ஆகி இருக்கிறார் என தெலுங்கு சினிமா வட்டாரங்கள் உறுதிபட தெரிவிக்கின்றன.

வரிசையாக பல படங்களில் நடித்து வரும் நடிகர் தனுஷ், தெலுங்கின் முன்னணி இயக்குநரும் தேசிய விருது பெற்றவருமான சேகர் கம்முலா இயக்கத்தில் நடிப்பதாக அறிவித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக 'தி க்ரே மேன்' படப்பிடிப்பிற்காக அமெரிக்காவில் இருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது. இதற்கிடையே, கடந்த வாரம் அமெரிக்காவில் இருந்து ஹைதராபாத் வந்திறங்கிய தனுஷ், கார்த்திக் நரேனின் 'டி43' பட படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இந்தப் படப்பிடிப்பின்போது தனது முதல் நேரடி தெலுங்கு படத்திற்காக இயக்குநர் சேகர் கம்முலாவையும், தயாரிப்பாளர் நாராயணன் தாஸ் நரங்கையும் சந்தித்து பேசினார் தனுஷ்.

இதே படப்பிடிப்பின்போது இன்னொரு முக்கிய தெலுங்கு இயக்குநரையும் தனுஷ் சந்தித்தாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. 'தொழி பிரேமா' மற்றும் 'ரங் தே' படங்களின் இயக்குநர் வெங்கி அட்லூரி தான் தனுஷை சந்தித்த நபர். இவர் டோலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான சீதாரா என்டர்டெயின்மென்ட்ஸின் தயாரிப்பாளர் சூர்யதேவர நாக வம்சியுடன் சென்று தனுஷை சந்தித்துள்ளார் எனப் பேசப்படுகிறது. தனுஷை வைத்து ஒரு படம் எடுப்பது குறித்து இவர்கள் இந்த சந்திப்பில் ஆலோசித்ததாகவும், இதற்கு தனுஷ் ஒப்புக்கொண்டதாகவும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்படம் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் தயாரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் வெளியிட தீர்மானித்துள்ளனராம். தெற்கிலும் பாலிவுட்டிலும் தனுஷுக்கு இருக்கும் புகழ் காரணமாக, தயாரிப்பாளர் நாகவம்சி தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் படத்தை எடுக்க தீர்மானித்துள்ளார்.

இதற்காக தனுஷ் ஒப்புக்கொண்ட நிலையில், ஸ்கிரிப்ட் தயாரிக்கும் பணிகளில் இயக்குநர் வெங்கி அட்லூரி ஈடுபட தொடங்கிவிட்டதாகவும், படத்தில் நடிக்க தனுஷுக்கு தயாரிப்பாளர் நாகவம்சி அட்வான்ஸ் கொடுத்துவிட்டதாகவும், விரைவில் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பை தனுஷே அறிவிப்பார் என்றும் வெளியாகியுள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ் நடிகர்கள் இப்போது நேரடி தெலுங்கு படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க முதலில் ஓகே சொன்னவர் நடிகர் விஜய். 'தோழா' படப்புகழ் இயக்குநர் வம்சி பைடிப்பள்ளியுடன் அடுத்த படத்தில் அவர் இணையவிருக்கிறார். விஜய்யை அடுத்து தனுஷ் இரண்டாவது தமிழ் நடிகராக சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் நடிப்பதாக அறிவிததார். இந்த அறிவிப்பு வெளியான ஒருவாரத்தில் தற்போது மற்றொரு தெலுங்கு இயக்குநர் உடன் கைகோக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது உண்மையாகும் பட்சத்தில் தமிழ், இந்தியை தொடர்ந்து தெலுங்கிலும் தனது கவனத்தை தனுஷ் திருப்புகிறார் என்பது உறுதியாகும்.