சினிமா

தனுஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் - ஒரே நாளில் இரண்டு பட அப்டேட்

சங்கீதா

நடிகர் தனுஷின் ‘வாத்தி’ மற்றும் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் அப்டேட்டுகள் ஒரேநாளில் வெளியாக உள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அடுத்தடுத்து நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். இவரின் நடிப்பில் கடந்த 22-ம் தேதி வெளியான ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ கலவையான விமர்சனங்களை பெற்றாலும், தனுஷின் நடிப்பு பாராட்டுகளை பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இந்தப் படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார்.

‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பிரகாஷ் ராஜ், பாரதிராஜா ஆகிய பிரபலங்கள் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்தப் படத்திலிலுந்து வெளியான தாய் கிழவி, மேகம் கருக்காதா பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில், இந்தப் படத்தின் 3-வது சிங்கிள் நாளை வெளியாகிறது. விவேக் எழுதியுள்ள இந்தப் பாடல் வரிகளுக்கு, அனிருத் இசையமைத்து பாடியுள்ளார். இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி வெளியாக உள்ளது. இதேபோல் தனுஷ் நடிப்பில், தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ‘வாத்தி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகிறது. 28-ம் தேதி, படத்தின் டீசர் வெளியாகிறது. பிரபல தெலுங்கு இயக்குநரான வெங்கி அட்லூரி இந்தப் படத்தை இயக்கி வருகிறார். தனுஷின் முதல் தெலுங்கு படம் இதுவாகும். தெலுங்கில் இந்தப் படத்திற்கு ‘சர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒரே நாளில் இரண்டு படங்களின் அடுத்தடுத்த அப்டேட்டுகளால் தனுஷின் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.