சினிமா

நிபந்தனை ஜாமீன்: சிறையில் இருந்து வெளியே வந்த நடிகை மீரா மிதுன்

kaleelrahman

நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் ஷாம் அபிஷேக்கிற்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், புழல் மகளிர் தனிச் சிறையில் இருந்து மீரான் மிதுன், நீதிமன்ற பிணையில் வெளியே வந்தார்.

அண்மையில் யூடியூப் வீடியோ மூலம் பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசியதாக மீரா மிதுன் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல் துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் நடிகை மீரா மிதுன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும், மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், விசாரணைக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் கடந்த மாதம் 14-ஆம் தேதி சென்னை மாநகர காவல் துறையால் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்துவரப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி மீரா மிதுனும் அவரின் நண்பரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மீரா மிதுன் தரப்பில், 35 நாட்களுக்கு மேலாக சிறையில் இருப்பதாலும், கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் சோர்வு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதி, நடிகை மீராமிதுன், அவரின் நண்பர் அபிஷேக் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றதில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து புழல் மகளிர் சிறையில் இருந்து மீரா மிதுன் இன்று வெளியே வந்தார்.