மஹா படம் தொடர்பாக நடிகை ஹன்சிகா மற்றும் இயக்குநர் ஜமீல் மீது நடவடிக்கை கோரி போலீசில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஹன்சிகா, பூரி ஜெகனாத்தின் தெலுங்குத் திரைப்படம் தேசமுதுருவில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக முதன்முதலில் அறிமுகமானார். இதையடுத்து இந்தி, கன்னடம் என படங்கள் நடித்தார். 2011 ஆம் ஆண்டு மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்து எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, வேலாயுதம், மான்கராத்தே, அரண்மனை, போகன், குலேபகவாலி உள்ளிட்ட பல படங்கள் நடித்து முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பெற்றார். தற்போது இவர் நடித்த துப்பாக்கி முனை திரைப்படம் திரைக்கு வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து இயக்குநர் ஜமீல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மஹா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஹன்சிகாவின் 50வது படமாகும். இப்படத்தை எக்ஸ்ட்ரா எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் ஹன்சிகா துறவி வேடமணிந்து சுருட்டு புகைத்தபடி போஸ் கொடுத்துள்ளார். இது ரசிகர்களிடையே வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கினாலும் இந்து அமைப்பினரிடையே மிகுந்த எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து இந்து மக்கள் முன்னணி அமைப்பாளர் நாராயணன் சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், இந்து மதம், பெண் துறவிகளை அவமதிக்கும் வகையில் ஹன்சிகா புகைப்பிடிப்பது போல் போஸ்டர் உள்ளது. எனவே மஹா படம் தொடர்பாக நடிகை ஹன்சிகா மற்றும் இயக்குநர் ஜமீல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.