சினிமா

ஆன்லைன் உணவில் கரப்பான் பூச்சி: நடிகை நிவேதா பெத்துராஜ் புகாரால் அதிகாரிகள் ஆய்வு

jagadeesh

ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக, திரைப்பட நடிகை நிவேதா பெத்துராஜ் அளித்த புகாரின்பேரில், சம்பந்தப்பட்ட உணவகத்தில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு நடத்தினர்.

தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நிவேதா பெத்துராஜ். இவர் சென்னை - கந்தன்சாவடியில் உள்ள உணவகத்தில் ஆன்லைன் மூலம் உணவை ஆர்டர் செய்துள்ளார். அதன்படி வந்து சேர்ந்த உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் நிவேதா புகார் அளித்தார். புகாரின்பேரில் சம்பந்தப்பட்ட உணவகத்தில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில், உணவுப் பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அவ்வாறு வைக்கப்பட்டிருந்த சிக்கன், முட்டைகள் உள்ளிட்டவற்றை குப்பை தொட்டியில் கொட்டி கிருமி நாசினி தெளித்து அழித்தனர். உணவகத்துக்கு நோட்டீஸ் அளித்த அதிகாரிகள், அங்கிருந்து தர ஆய்வுக்காக பிரியாணியை எடுத்து சென்றனர்.