சினிமா

நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி - விரைவில் நலம்பெற ரசிகர்கள் பிரார்த்தனை

newspt

கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து, வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக நடிகர் சிரஞ்சீவி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துவந்தநிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில், 2 லட்சத்து 85 ஆயிரத்து 914 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொரோனா தொற்றுக்கு சமீபகாலமாக திரைப்பிரபலங்களும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். அண்மையில் நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம், அருண்விஜய், வடிவேலு, சத்யாராஜ், விஷ்ணு விஷால், மம்முட்டி, துல்கர் சல்மான், ஜெயராம், மகேஷ் பாபு, நடிகைகள் த்ரிஷா, குஷ்பு, மீனா உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தெலுங்கு உலகின் மூத்த நடிகரான சிரஞ்சீவி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “முன்னெச்சரிக்கையாக இருந்தும் லேசான அறிகுறிகளுடன் எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் உங்களை சந்திக்க காத்திருக்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து விரைவில் நலம் பெற அவருக்கு, பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வரும்நிலையில், ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.