புதிய முயற்சி என்று மலையைப் புரட்டிப் போட்டுவிடலாம் என முயன்று முட்டி முட்டி முடியாமல் தோற்றுப்போனேன் என்று இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.
சேரன், புதிய படங்களை டி.வி.டி. மூலம் வீடுதோறும் விற்பனை செய்யும் சி2ஹெச் என்ற புதிய நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். அந்நிறுவனம் சரிவர செயல்பட முடியவில்லை. இந்நிலையில் இயக்குநர் சேரன் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
என் இதயம் நிறைந்த அன்பு ரசிகர்களே தொடர்ந்து எனக்கும் என் திரைப்படங்களுக்கும் ஆதரவு அளிக்கும் தமிழ் பண்பாளர்களே வணக்கம். மூன்று வருடங்களாக புதிய முயற்சி என்ற நோக்கில் மலையை புரட்டிப் போட்டுவிடலாம் என முயன்று முட்டி முட்டி முடியாமல் தோற்றுப்போனேன்.. பிறகுதான் புரிந்தது இங்கே சிறுகல்லை நகர்த்தக்கூட முடியாத அளவு தவறுகளும், பொறாமை உணர்வுகளும், பரந்தமனப்பான்மை இன்மையும் புரையோடிப் போயிருக்கிறது என.. எனவே இந்த சமூக மாற்றம் என்பது ஒரு நல்லவன் நினைத்து முடியப்போவதில்லை என புரிந்தபின்... எனக்கு எது வேண்டுமோ அதை நோக்கி மட்டுமே பயணிப்பது என முடிவு செய்து இதோ திரைப்படம் உருவாக்கத் தயாராகிவிட்டேன். திருட்டு DVD யில் பார்த்தவர்கள் போக ஆன்லைனில் முதல்நாளே எந்த கட்டணமுமின்றி இலவசமாக பார்த்தவர்கள் போக அனுமதியின்றி பஸ்களில் படம் பார்ப்பவர்கள் போக நேர்மையாக உழைப்பை உணர்ந்து எவ்வளவுபேர் பணம் கொடுத்து படம் பார்க்கிறார்களோ அந்த பட்ஜெட்டில் மட்டுமே படம் எடுக்கலாம் என முடிவு செய்து இந்த வருடம் இரண்டு படங்கள் உருவாக்க உள்ளேன்.. எப்போதும்போல உங்கள் ஆதரவும் அரவணைப்பும் தேவை.. நன்றி!
தற்போது, விஜய் சேதுபதியை முதன்மைக் கதாபாத்திரமாக வைத்து இயக்கவுள்ள படத்தின் முதற்கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் இயக்குநர் சேரன்.