சினிமா

நாடோடிகள் 2 படத்திற்கான தடை நீக்கம்..! இன்று இரவு முதல் ரிலீஸ்

webteam

நடோடிகள் - 2 திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சசிக்குமார், நடிகை அஞ்சலி ஆகியோர் நடிப்பில், சமுத்திரக்கனி இயக்கத்தில் நாடோடிகள் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை தயாரிப்பாளர் நந்தகோபால் தயாரித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த படத்திற்கு தடை விதிக்க கோரி எப்.எம்.பைனான்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், “நாடோடிகள் 2 படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால், பட தயாரிப்பு செலவுகளுக்காக தன்னை அணுகியபோது, படத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உரிமையை அளிப்பதாக 5 கோடியே 25 லட்சம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

பல தவணைகளாக, 3 கோடியே 50 லட்சம் பணம் தயாரிப்பாளருக்கு வழங்கிய நிலையில் வேறு நிறுவனம் மூலமாக படத்தை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெளியிட தயாரிப்பாளர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இதனால் எனக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. படத்தின் உரிமை தனக்கே சொந்தமானது என அறிவிக்க வேண்டும். அதுவரை படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதற்காக "கீ டெலிவரி மெசேஜ்" தர கியூப் நிறுவனத்திக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். 

இந்த நிலையில் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தயாரிப்பாளர் நந்தகோபால் சார்பில் நீதிபதி பி.டி.ஆஷா முன்பு இன்று அவசர முறையீடு செய்யப்பட்டது. அப்போது தயாரிப்பாளர் சார்பில் கொடுக்க வேண்டிய தொகையில் பாதி தொகையை அளிப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி படத்தை வெளியிட விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி படத்தை வெளியிடலாம் என்று இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளார்.