சினிமா

நயன்தாராவின் ’கோல்ட்’ திரைப்படத்தை வெளியிட தடைகோரிய வழக்கு - நீதிமன்றம் முடித்துவைப்பு

webteam

’மாநாடு’ படத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாமல் நயன்தாரா நடிப்பில் உருவான ’கோல்ட்’ திரைப்படத்தை வெளியிட தடை கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது.

வி ஹவுஸ் படத் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான சுரேஷ் காமாட்சி தாக்கல் செய்துள்ள வழக்கில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவான ’மாநாடு’ திரைப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியீட எஸ்.எஸ்.ஐ. படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு 13 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த தொகையில் 27 லட்ச ரூபாயையும், ஜி.எஸ்.டி. பாக்கி தொகை ஒரு கோடியே 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் என ஒரு கோடியே 31 லட்ச ரூபாயை தரவேண்டிய நிலையில், பிரித்விராஜ் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ’கோல்ட்’ என்ற மலையாள படத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட எஸ்.எஸ்.ஐ. தயாரிப்பு நிறுவனம் சார்பில் உரிமம் வாங்கியுள்ளதாக தெரிவித்தார். எனவே மாநாடு திரைப்படத்தின் பாக்கியை தராமல் ’கோல்ட்’ படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜரானார். அப்போது எஸ்.எஸ்.ஐ. தயாரிப்பு நிறுவனம் தரப்பில் நிலுவையில் உள்ள தொகையை 90 நாட்களில் தவணை முறையில் கொடுப்பதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை முடித்துவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.