சினிமா

‘நேர்கொண்ட பார்வை’ படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை

Rasus

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை சட்ட விரோதமாக இணைய தளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்திப் படமான, ‘பிங்க்’,  ‘நேர்கொண்ட பார்வை’ என்ற தலைப்பில் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது. அமிதாப் நடித்த வழக்கறிஞர் கேரக்டரில் அஜித்குமார் நடித்துள்ளார். வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், டெல்லிகணேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். இதை ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இந்தப் படம் வரும் 8-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

இதனிடையே ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதை தடுக்க இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அனைத்து காப்புரிமைகளும் தங்கள் வசம் உள்ள நிலையில், சட்டவிரோதமாக இணையதளங்களிலோ அல்லது கேபிள் டிவி-களிலோ படத்தை வெளியிட்டால் உளைச்சலையும், பொருளாதார நஷ்டத்தையும் ஏற்படுத்தும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து  ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை சட்ட விரோதமாக இணைய தளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.