சினிமா

பார்வதி நாயர் கொடுத்த கொலை மிரட்டல் புகார் - 3 பிரிவுகளின் கீழ் இளைஞர் மீது வழக்கு!

சங்கீதா

தனது வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் சந்திர போஸ் மீது நடிகை பார்வதி நாயரின் முதல் புகாருக்கு ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது இரண்டாவது புகாருக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 20-ம் தேதி தனது வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவர், ரூபாய் ஒன்பது லட்சம் மதிப்புள்ள இரண்டு கைக்கடிகாரங்கள், ஒன்றரை லட்சம் மதிப்புள்ள ஐபோன், ரூ. 2 லட்சம் மதிப்புள்ள லேப்டாப் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகை பார்வதி நாயர் புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகாருக்கு நுங்கம்பாக்கம் போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது சலசலப்பை ஏற்படுத்தியதற்கு இடையில், கடந்த அக்டோபர் மாதம் 23-ம் தேதி, பார்வதி நாயரின் முன்னாள் உதவியாளர் சுபாஷ் சந்திர போஸ், நடிகை பார்வதி நாயர் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், தனக்கு கொலை மிரட்டல் கொடுத்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது தனதுப் புகைப்படத்தை தவறாக பயன்படுத்துவதுடன், அந்த புகைப்படத்தை பொதுவெளியில் வெளியிடுவதாகவும், தனக்கு கொலை மிரட்டல் தருவதாகவும் பார்வதி நாயர், சுபாஷ் சந்திர போஸ் மீது புதிய புகார் ஒன்றை காவல் ஆணையரகத்தில் கொடுத்துள்ளார். பார்வதி நாயர் அளித்த புகாரின் அடிப்படையில் நுங்கம்பாக்கம் போலீசார், சுபாஷ் சந்திர போஸ் மீது கொலை மிரட்டல் விடுத்தல், பெண்ணை மானபங்கம் செய்தல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.