பிரபல தெலுங்கு நடிகை டிம்பிள் ஹயாதி மீது அவரது வீட்டுப் பணிப்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த நடிகை டிம்பிள் ஹயாதி, தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். தமிழில் ’தேவி 2’ படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், ஒடிசாவைச் சேர்ந்த 22 வயதான வீட்டு வேலைக்காரப் பெண் பிரியங்கா பிபர், நடிகை டிம்பிள் ஹயாதி மற்றும் அவரது கணவர் விக்டர் டேவிட் ஆகியோர் மீது ஹைதராபாத் போலீஸில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், ஹயாதி மற்றும் அவரது கணவர் தன்னை துன்புறுத்தியதாகவும், அவமானப்படுத்தப் பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். தனக்குப் போதுமான உணவு வழங்கப்படவில்லை என்றும், அடிக்கடி வாய்மொழி துஷ்பிரயேகம் மற்றும் அவமானகரமான வார்த்தைகளுக்கு ஆளானதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், நடிகையும் டேவிட்டும் தன்னை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும், தனது பெற்றோரைக் கொலை செய்வதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அந்தத் தருணத்தைத் தனது செல்போனில் பதிவுசெய்ய முயன்றபோது, டேவிட் தனது செல்போனைப் பிடுங்கி, தரையில் அடித்து நொறுக்கி, தன்னைத் தாக்க முயன்றதாக பிரியங்கா புகாரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் இருதரப்பினருக்கும் சம்மன் அனுப்பியுள்ளனர். விரைவில் அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனர். நடிகை டிம்பிள் ஹயாதி, 2023-இல் ஐபிஎஸ் அதிகாரியின் ஒருவரின் காரைச் சேதப்படுத்திய வழக்கிலும் தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது.