சினிமா

’உயிருக்கு ஆபத்து’: மஞ்சுவாரியர் புகாரில் இயக்குனர் மீது வழக்குப் பதிவு

webteam

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, நடிகை மஞ்சுவாரியர் கொடுத்த புகாரை அடுத்து, மலையாள இயக்குனர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

மலையாள திரைப்பட இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன். இவர் கல்யாண் ஜூவல்லர்ஸ், மலப்புரம் கோல்ட் உட்பட பல முன்னணி விளம்பர படங்களை இயக்கியவர். இவர், மோகன்லால், மஞ்சுவாரியர், பிரகாஷ் ராஜ் நடித்த ‘ஒடியன்’ என்ற படத்தை 2018 ஆம் ஆண்டு இயக்கினார். இந்தப் படம் சரியாக ஓடவில்லை. 

இந்நிலையில் இயக்குநர் ஸ்ரீகுமாருக்கு எதிராக நடிகை மஞ்சு வாரியார், கேரள டிஜிபியிடம் புகார் அளித்தார். அதில், ’ஓடியன்’ ரிலீஸுக்குப் பிறகு இயக்குநர் ஸ்ரீகுமார், சமூக வலைத்தளங்களில் என்னைத் தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறார். இதை கண்டுகொள்ளாமல் இருந்தேன். ஆனால் அவரும் அவர் நணபர் மாத்யூ சாமுவேலும் (தெஹல்காவின் முன்னாள் மானேஜிங் எடிட்டர்) எனக்கு எதிராக அவதூறுகளைத் தொடர்ந்து பரப்பி வருகின்றனர். அவர்களால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சுகிறேன்’’ என்று கூறினார். இந்த புகார் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மஞ்சு வாரியரின் புகாருக்கு ஸ்ரீகுமார் மேனன் பதிலளித்திருந்தார். அதில், ‘பத்திரிகைகளில் பார்த்தே உங்கள் புகாரைத் தெரிந்துகொண்டேன். ‘காரியம் முடிந்ததும் கைவிட்டுவிட்டு செல்பவர்தான் மஞ்சுவாரியர், அவரை நம்ப வேண்டாம்’ என்று என்னிடம் பலர் கூறினார்கள். திலீப்பை பிரிந்து வீட்டை விட்டு வெளியே வரும் போது, வெறும் ஆயிரத்து ஐநூறு ரூபாய் மட்டுமே இருக்கிறது என்று சொன்னதை நான் மறக்கவில்லை. அப்போது ரூ.25 லட்சம் கொடுத்து விளம்பர படத்துக்கும் சினிமாவுக்கு ஒப்பந்தம் செய்தேன்.

அப்போது, அந்த குருவாயூரப்பனே வந்து உதவி செய்ததாக நீங்கள் சொன்னதும் ஞாபகத்தில் இருக்கிறது. உங்களுக்கு என்ன துரோகம் செய்தேன் என்று தெரியவில்லை. உங்களால் ஏராளமான மிரட்டல்களையும் அவமானங்களையும் நான் சந்தித்து விட்டேன். என் மீதான உங்கள் புகாரை சட்டப்படி சந்திக்கத் தயாராக இருக்கிறேன்’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நடிகை மஞ்சு வாரியரின் புகாரை அடுத்து, திருச்சூர் கிழக்கு போலீசார், இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.