அல்லு அர்ஜுன் எக்ஸ் தளம்
சினிமா

கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலி.. புஷ்பா 2 பார்க்க சென்று சோகம்.. அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு!

நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 திரைப்படத்தை பார்க்க திரையரங்குக்குச் சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பரிதாபமாக பலியானார். இதனால், அல்லு அர்ஜூன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Prakash J

சுகுமார் இயக்கி நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புஷ்பா இரண்டாம் பாகம் திரையரங்குகளில் இன்று (டிச.5) காலை வெளியானது. முன்னதாக, இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு வசூல் மட்டுமே ரூ.100 கோடியை கடந்ததாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, நேற்று ஐதராபாத்தில் சிக்கடப்பள்ளியில் உள்ள சந்தியா திரையரங்கில் இரவு 9.30 மணிக்கு புஷ்பா-2 பிரீமியர் காட்சியைக் காண குடும்பத்துடன் சென்ற 35 வயதான ரேவதி என்ற பெண் கூட்டத்தில் சிக்கி மயங்கி விழுந்தார். உடனே, அப்பெண்ணை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார். இதில் அவரது மகனும் பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பாக, நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்லு அர்ஜூனை தவிர்த்து, அதிகளவிலான கூட்டத்தை ஏற்பாடு செய்த சந்தியா தியேட்டர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.