பிரபல பெங்காலி நடிகை கிரிஜா ஓக். சமீப நாட்களாக சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் இவர் தான். Manini என்ற பெங்காலி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் கிரிஜா. பல மராத்தி படங்களில் நடித்த இவர் இந்தியில் ஆமீர்கான் இயக்கிய `Taare Zameen Par', அட்லீ இயக்கிய `Jawan' போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இந்தியில் பிரபலமான டிவி தொடர் CID உட்பட பல தொடர்களிலும் நடித்துள்ளார்.
சரி இப்போது திடீரென இவர் ஏன் ட்ரெண்ட் ஆனார்? சென்ற மாதம் இவர் கொடுத்த ஒரு பேட்டியின் க்ளிப்பிங் கடந்த மூன்று நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வந்தது. அந்த பேட்டியில் தன் வகுப்பறையில் நடந்த சம்பவம் ஒன்றை பகிர்ந்திருந்தார் கிரிஜா. "எங்கள் இயற்பியல் ஆசிரியர் 'What are babes?' எனக் கேட்பார். வகுப்பில் அனைவரும் அவர் என்ன சொல்ல வருகிறார் எனப் புரியாமல் குழம்புவோம். ஆனால் அவரது தவறான உச்சரிப்பின் காரணமாக Waves என சொல்லை Babes என உச்சரித்துள்ளார். அது எங்களுக்கு வேடிக்கையான சம்பவமாக இருந்தது" எனப் பகிர்ந்திருக்கிறார். இந்த க்ளிப்பிங் மற்றும் அந்த நேர்காணலின் போது அவரது உடை அலங்காரங்கள் போன்றவை பலராலும் ரசிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவருடைய புகைப்படங்கள் பலவற்றை ரசிகர்கள் பகிர்ந்து, நேஷனல் க்ரஷ் எனப் பட்டமும் கொடுத்துவிட்டார்கள்.
தனக்கு திடீர் என கிடைத்து வரும் இந்த வரவேற்பும், ட்ரெண்டிங் ஆவதை பற்றியும் தனது கருத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார் கிரிஜா. அதில் தன்னுடைய புகைப்படங்கள் AI கொண்டு மார்ஃப் செய்யப்படுவது பற்றி வருத்தப்பட்டு பேசி இருக்கிறார். அந்த வீடியோவில் "கடந்த மூன்று நாட்களாக சமூக வலைதளங்களில் நடப்பவை எல்லாம் தீவிரமான ஒன்றாக இருக்கிறது. அவை ஒருசேர கிறுக்குத்தனமாகவும், சிறப்பானதாகவும் இருக்கிறது. திடீரென என்மீது நிறைய கவனம் குவிந்துள்ளது. இதை எப்படி எடுத்துக் கொள்வதென யோசித்து வருகிறேன். அதே நேரம் நிறைய அன்பும் எனக்கு வருகிறது. அன்பு நிறைந்த கமெண்ட், குறுஞ்செய்திகள், போன் கால், சமூக வலைத்தளங்கள் மூலமாக வருவது மிகவும் உணர்ச்சிகரமானதாக இருக்கிறது. என்னுடைய நிறைய நண்பர்களும் உறவினர்களும் மீம்ஸ், போஸ்டர்களை அனுப்புகின்றனர். அவை நகைச்சுவையாகவும், க்ரியேட்டிவாகவும் இருக்கிறது. அதேவேளையில் சில மோசமான வகையில் AI மூலம் சித்தரிக்கப்பட்ட படங்களும் வருகின்றன. அவை என்னை ஆபாசமான வகையில் காட்ட முற்படுகின்றன. அவை என்னை அசௌகரியம் ஆக்குகின்றன.
நானும் இந்த காலகட்டத்தில் வாழும் ஒரு நபர்தான். ஒரு விஷயம் வைரலாகும் போது என்ன நடக்கும் என்பதும் எனக்குத் தெரியும். இப்படியான படங்கள் உருவாகும், அவற்றுக்கு லைக்ஸ் கிடைக்கும் வரை அவை பரப்பப்படும். ஆனால் என்னை வருத்தமடைய செய்வது என்னவென்றால், இதற்கு ஒரு எல்லை இல்லை என்பது. அதை அனுமதிக்க முடியாது. எனக்கு 12 வயதில் மகன் இருக்கிறான். அவன் இப்போது சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில்லை. ஆனால் காலப்போக்கில் அவனும் அவற்றை பயன்படுத்துவான். இந்தப் படங்களும் எப்போதும் இணையத்தில் இருக்கத்தான் போகிறது. அவன் தன் தாயுடைய இப்படியான படங்களை பார்க்க நேரும் என்பது என்னை அச்சமடைய செய்கிறது. அதை அவன் எப்படி எடுத்துக் கொள்வான்?
இதனை இப்போது ரசிக்கும் நபர்களை போலவே, அவனுக்கு கண்டிப்பாக இவை உண்மையான படங்கள் இல்லை என்பது தெரியும். என்னால் இதனை தடுக்க எதுவும் செய்ய முடியாது எனத் தெரியும். ஆனால் அதற்காக எதுவுமே செய்யாமல் இருப்பது சரி என எனக்குப்படவில்லை. எனவே உங்களுக்கு ஒரு வேண்டிக்கோள், AI பயன்படுத்தி ஆண்/பெண் படங்களை மார்ஃப் செய்யும் நபர் நீங்கள் என்றால், நீங்கள் செய்வதை பற்றி சற்று சிந்தியுங்கள். இதை எல்லாம் செய்யாத நபராக நீங்கள் இல்லை ஆனால் இத்தகைய படங்களை லைக் செய்யும் நபர் நீங்கள் என்றால் பிரச்னைக்குரியவர் நீங்களும் தான். எனவே நீங்கள் இதை மறுபரிசீலனை செய்யுங்கள். இது தவிர மற்ற எல்லாம் இந்த ட்ரென்டிங் மூலம் பல நல்ல விஷயங்கள் நடந்துள்ளது. என்னுடைய படங்கள் கவனிக்கப்படுகிறது. நீங்கள் எப்போதும் போல எனக்கு அன்பை கொடுங்கள். நானும் எனது பணியை சிறப்பாக செய்கிறேன்" எனப் பேசியுள்ளார்.