பிரபல நடிகை டாப்ஸி, 'அஸி' படத்தின் விளம்பர நிகழ்ச்சியில், 'பிடித்த அரசியல்வாதி' என்ற கேள்விக்கு பிரதமர் மோடியைத் தேர்ந்தெடுத்து, 'நான் இந்த நாட்டில் வாழ வேண்டும்' என்றார். அவரது பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல பாலிவுட் நடிகை டாப்ஸி. நடிப்பு தாண்டி, துணிச்சலான அவரது பேச்சுகளும், கருத்துக்களும் என பரபரப்பாக பேசப்படக்கூடிய நபர். இவர் நடிப்பில், அனுபவ் சின்கா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'அஸி' (Assi). பிப்ரவரி 20-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதற்கான விளம்பரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இப்படத்தின் புரமோஷனுக்காக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் டாப்ஸி. அதில் அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வியும், அதற்கு அவர் கொடுத்த பதிலும் கடந்த இரண்டு நாட்களாக வைரலாக சுற்றி வருகிறது.
அதில் மம்தா பானர்ஜி, ஸ்மிருதி இரானி, மாயாவதி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரில் யாரைப் பிடிக்கும் என்ற கேள்விக்கு, முதலில் சுஷ்மா ஸ்வராஜின் பெயரை டாப்ஸி குறிப்பிட்டார். பின்னர் கொடுக்கப்பட்ட விருப்பங்களில் ஸ்மிருதி இரானியைத் தேர்ந்தெடுத்தார். பின்னர் பிடித்த இசைக்கலைஞர், சிறந்த நடிகை போன்ற கேள்விகள் எல்லாம் கேட்கப்பட, அதற்கும் பதில் அளித்தார்.
இதற்கு இடையில், "உங்களுக்குப் பிடித்த அரசியல் தலைவர் யார்? பிரதமர் நரேந்திர மோடியா அல்லது ராகுல் காந்தியா?" என்ற கேள்விக்கு, டாப்ஸி சிறிதும் தயக்கமின்றி பிரதமர் மோடியைத் தேர்ந்தெடுத்து, `எனக்கு இன்னும் இந்த நாட்டில் வாழ வேண்டும்' என்றார். இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் எனக் கேட்கப்பட, "நீங்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள். நான் இந்த நாட்டில் வாழ வேண்டும் என்று மட்டும் தான் சொல்கிறேன்" என்றார். இந்த வீடியோ இப்போது பரவலாக இணையத்தில் பரவி வருகிறது.