ஷாரூக்கானுக்கு பதிலாக ‘டான் 3’ல் நடிக்க இருந்த ரன்வீர் சிங் திடீரென விலகியதால், தயாரிப்புப் பணிகள் பாதிக்கப்பட்டு, 45 கோடி இழப்பை ஈடு செய்ய வேண்டும் என பர்ஹான் அக்தர் கோரிக்கை. பிரச்சினை தீர்க்க சல்மான் கான் உட்பட பலர் முயன்றும் பலனின்றி, திரைப்பட ஊழியர் சங்கம் ரன்வீருக்கு தடை விதித்தது. இதனால் அவர் படப்பிடிப்பை ஹைதராபாத்துக்கு மாற்றி, பாலிவுட்டில் தன் எதிர்காலம் குறித்து சவாலான சூழ்நிலையை எதிர்கொள்கிறார்.
பாலிவுட்டின் ஐகானிக் படங்களில் ஒன்று `டான்'. இப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. பின்னர் பாலிவுட்டிலேயே ஷாரூக்கான் நடிப்பில் பர்ஹான் அக்தர் இயக்கத்தில் அப்படம் ரீமேக் செய்யப்பட்டது. அதோடு சேர்த்து அதன் இரண்டாம் பக்கத்தையும் இயக்கி ஹிட் கொடுத்தார் பர்ஹான் அக்தர். மூன்றாவது பாகத்தை எடுக்கும் முயற்சியிலும் இறங்கினார், ஆனால் அதில் நடிக்க ஷாரூக்கான் ஆர்வம் காட்டவில்லை. எனவே ரன்வீர் சிங்கை பர்ஹான் அணுக அவரும் நடிக்க சம்மதித்தார்.
படப்பிடிப்புக்கான வேலைகள் முழு வேகத்தில் நடந்து கொண்டிருந்தன. ஆனால் படப்பிடிப்பு தொடங்க இரண்டு வாரமே இருந்த நிலையில் திடீரென அப்படத்தில் நடிக்க முடியாது என்று ரன்வீர் சிங் தெரிவித்துவிட்டார். இதனால் படப்பிடிப்புக்கான வேலைகளைத் தொடங்கியதில் தனக்கு 45 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி அத்தொகையை கொடுக்க வேண்டும் என்று ரன்வீர் சிங்கிடம் பர்ஹான் அக்தர் கோரிக்கை விடுத்தார். இந்த பிரச்சனையை சரி செய்ய சல்மான்கான் உட்பட பலர் முயன்றும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. பர்ஹான் அக்தர் தரப்பில் திரைப்பட ஊழியர்கள் சங்கத்திலும் புகார் செய்யப்பட்டுள்ளது. இதனால் ரன்வீர் சிங்கிற்கு திரைப்பட ஊழியர் சங்கம் தடை விதித்து இருக்கிறது. அதனால் தொடர்ந்து இவ்விவகாரத்தில் பிடிகொடுக்காமல் இருந்து வந்த ரன்வீர் சிங் இப்போது இறங்கி வந்து, பர்ஹான் அக்தரின் மற்றொரு படத்தில் நடித்து கொடுக்க தயாராக இருப்பதாகவும், பர்ஹான் அக்தரின் சகோதரி சோயா அக்தர் படம் ஒன்றிலும் நடித்து கொடுக்க தயாராக இருப்பதாக ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதனை பர்ஹான் அக்தர் நிராகரித்துவிட்டார். மேலும் பர்ஹான் அக்தர் மற்றும் அவரது சகோதரி சோயா அக்தர் ஆகிய இரண்டு பேரும் இனி ரன்வீர் சிங்குடன் பணியாற்ற தயாராக இல்லை என்று தெரிவித்துவிட்டனர். இதனால் நிலைமை மேலும் சிக்கலாகி இருக்கிறது. டான் 3 படப்பிடிப்பு தொடர்ந்து தாமதமாகி வந்ததாலும், படத்திற்கான கதை முழுமையடையவில்லை என்றும் கூறி இப்படத்தில் இருந்து ரன்வீர் சிங் விலகியதாகக் சொல்லப்படுகிறது. திரைப்பட ஊழியர் சங்கத்தின் தடையால் ரன்வீர் சிங் தனது அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை ஹைதராபாத்திற்கு மாற்றி இருக்கிறார். இரு பாகங்களாக வந்த துரந்தர் படங்கள் மூலம் மியாகப்பெரிய வெற்றியை அடைந்த ரன்வீருக்கு இப்போது பெரிய சோதனை காலம் போல இந்த பிரச்னை எழுந்துள்ளது பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.