ரன்வீர் சிங், அக்ஷய் கண்ணா, சஞ்சய் தத், அர்ஜூன் ராம்பால், மாதவன், சாரா அர்ஜூன் நடிப்பில் ஆதித்யா தார் இயக்கி டிசம்பர் 5ாஅம் தேதி வெளியான படம் `துரந்தர்'. பாகிஸ்தான் தீவிரவாத குழுவுக்குச் செல்லும் ஓர் இந்திய உளவாளியின் சாகசங்கள் என்ற பெயரில் கற்பனையும், சில வரலாற்று நிஜ சம்பவங்களையும் இணைத்துப் படத்தை உருவாக்கி இருந்தனர். திரையரங்கில் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வசூலிலும் சாதனைகளை புரிந்தது படம். ஜனவரி 30ஆம் தேதி இப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான பின்பும், திரையரங்கில் கூட்டம் குறையாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தை பார்வையாளர்கள் புகழ்வது போல, நிறைய பிரபலங்களும் புகழ்ந்து வருகின்றனர்.
இப்படத்தின் ஹிட் ஆன அளவு சினிமாத் துறையில் பலருக்கும் வியப்பை கொடுத்துள்ளது. டிசம்பர் மாதம், அதாவது `துரந்தர்' படம் வெளியாகும் முன்பு வரை 2025ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம் என்ற இடத்தை பிடிக்க `சாவா' மற்றும் `காந்தாரா சாப்டர் 1' படங்கள் `ரெண்டு பேருக்கு நடுவுல்தான் போட்டியே' என மோதிக் கொண்டிருந்தது. ஆனால் அதை எல்லாம் ஓரமாக போகச் சொல்லி ரெக்கார்டுகளை தாறுமாறாக உடைத்தது `துரந்தர்'. 250 கோடியில் (முதல் பாகம் மட்டும்) உருவான `துரந்தர்' படம் இதுவரை 1,300 கோடிக்கும் மேலாக வசூல் செய்துள்ளது. பிப்ரவரில் வெளியாகி ஹிட்டான `சாவா' 800 கோடியும், அக்டோபரில் வெளியாகி ஹிட்டான `காந்தாரா சாப்டர்-1 படம் 900 கோடியும் வசூல் செய்தது.
2025இல் அதிகம் வசூல் செய்த இந்திய படம், ஒட்டுமொத்த இந்தி சினிமாவில் அதிக வசூல் செய்த பட பட்டியலில் 2ஆம் இடம் (முதல் இடத்தில் இருப்பது ஆமீர்கானின் `டங்கல்'), மற்றும் ஒட்டு மொத்த இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்த படத்தில் நான்காம் இடத்தையும் பிடித்துள்ளது `துரந்தர்'. மூன்றாம் இடத்தில் `Pushpa 2: The Rule' 1600+ கோடியும், இரண்டாம் இடத்தில் `Baahubali 2: The Conclusion' 1800+ கோடியும், முதல் இடத்தில் `டங்கல்' 2000+ கோடியும் உலகளவில் வசூல் செய்துள்ளது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் `துரந்தர்' மிகவும் வன்முறையான படம் என்பதால், ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. அத்தகைய படங்களுக்கு குடும்பங்கள் மத்தியில் வரவேற்பு பெரிய அளவில் இருக்காது. ஆனால் அதையும் தாண்டி இந்தப் படம் இவ்வளவு பெரிய வசூலை செய்துள்ளது.
எப்போதுமே இந்த அளவு பெரிய ஹிட்டாகும் படத்தின் இரண்டாம் பாகத்து மேல் மக்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாக்கும். அது முதல் பாகத்தைவிட மிகப்பெரிய வசூல் சாதனையை செய்யும். எனவே இப்போது அனைவரின் கண்களும் `துரந்தர்' படத்தின் இரண்டாம் பாகமான `Dhurandhar: The Revenge' மீதுதான் உள்ளது. மார்ச் 19 வெளியாகவுள்ள இப்படத்தின் டீசரும் இன்று வெளியாகியுள்ளது. இந்த முறை இந்தி மட்டுமில்லாது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. இந்தப் படம் `டங்கல்' படத்தின் வசூல் சாதனையை முறியடித்து நம்பர் 1 இடத்தில் அமர மிக அதிக வாய்ப்புள்ளது. என்ன நடக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.