சினிமா

பாலியல் வன்கொடுமை வழக்கு: காவல் நிலையத்தில் ஆஜரான இயக்குநர் அனுராக் காஷ்யப்

EllusamyKarthik

பாலிவுட் சினிமா இயக்குனர் அனுராக் காஷ்யப் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைக்காக மும்பை வெர்சோவா காவல் நிலையத்தில் ஆஜரானார்.

கடந்த 2013இல் பாயல் கோஷ் என்பவரை பாலியல் பலாத்காரம் செய்தார் என வெர்சோவா காவல் நிலையத்தில் கடந்த செப்டம்பர் மாதம் புகார் கொடுத்திருந்தார். 

“ஐந்து வருடங்களுக்கு முன்னர் பணி நிமித்தமாக அனுராக் காஷ்யப்பை சந்தித்திருந்தேன். அப்போது அவர் என்னை அவரது வீட்டுக்கு வரும்படி அழைத்தார். நான் சென்றதும் தனி அறையில் என்னை பாலியல் ரீதியாக சீண்டினார்.

படைப்பாளி என்ற திரையின் கீழ் ஒளிந்துள்ள அரக்கனை வெளி உலகிற்கு அடையாளம் காட்டவே இதை செய்துள்ளேன். இதனால் எனக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. அதிகாரிகள் என் புகார் மீது தக்க நடவடிக்கை எடுக்கும் படியும் கேட்டுக் கொள்கிறேன்” என பாயல் கோஷ் தனது புகாரில் தெரிவித்திருந்தார். 

இதனையடுத்து கடந்த 22 ஆம் தேதியன்று அனுராக் காஷ்யப் மீது ஃஎப்.ஐ.ஆர் பதியப்பட்டது. அதோடு விசாரணைக்காக நேரில் ஆஜராகும் படி போலீசார் சம்மனும் அனுபினர். அதன்படி இயக்குனர் அனுராக் காஷ்யப் கடந்த புதன் அன்று போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அவருடன் வழக்கறிஞரும் காவல் நிலையம் வந்திருந்தார்.