பிரதீப்
பிரதீப் PT
பிக்பாஸ்

பிக் பாஸ் 7: போட்டியாளர்களுக்கு ‘டப்’ கொடுக்கும் பிரதீப்... நல்லவரா? கெட்டவரா?

Jayashree A

பிக்பாஸ் சீசன் 7ல் கலந்துகொண்டு மக்களின் கவனத்தை பெற்ற பிரதீப் யார்? இதுவரை இவர் செய்த சம்பவங்கள் என்னென்ன?

பிக் பாஸ் சீசன்7 நடந்துக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் இதில் பங்குபெற்ற பிரபலங்களில் மக்கள் மனதில் பிரபலமாக பேசப்படும் போட்டியாளர்களில் பிரதீப்பும் ஒன்று.பிக்பாஸ் நிகழ்சி போரடிக்காமல் போவதற்கு இவரும் ஒரு காரணம். இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும்போதே தனக்கு ஒருவிதமான மனநோய் அதாவது ஓசிடி இருக்கிறது என்று கூறியிருந்தார்.

இவர் அருவி, டாடா, வாள் போன்ற படத்தில் நடித்தவர். இவருக்கு பிலாசபி, பேண்டசி கதைகள் மிகவும் பிடிக்கும் என்று கூறியிருந்தார். இவர் கடந்து வந்த பாதை மிகவும் கோரமானது. தனது சிறு வயதில் தாய் தந்தைக்குள் ஏற்பட்ட பிரச்னையில், தாயை தந்தையே கொன்றதாகவும், அதன் குற்ற உணர்சியால் அவரது தந்தை குடிப்பழக்கத்திற்கு ஆளாகி அவரும் இறந்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு பிரதீப், அவரது சித்தி வீட்டில் வளர்ந்திருக்கிறார். லயோலாவில் விஸ்காம், அதம் பிறகு சைகாலஜி முடித்தவர். இயக்குநராக வேண்டும் என்பது இவரது கனவு.

பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்துகொண்ட, நடிகர் கவினின் நெருங்கிய நண்பர்தான் இந்த பிரதீப். கவின் பிக்பாஸில் இருந்த சமயம், கவினை பார்க்க வீட்டிற்குள் நுழைந்த பிரதீப், ’பளார்’ என்று கவினை அறைந்து அவர்களுக்குள் இருக்கும் நட்பின் ஆழத்தை வெளிப்படுத்தியவர். பிக் பாஸ் வீட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எவ்வாறெல்லாம் இருந்தால் பிரபலமாக முடியும் என்பதை நன்கு தெரிந்துகொண்டு தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

நுழைந்தவுடன் தன் கையில் இருந்த கேப்டன் பேச்சை தக்கவைத்துக்கொள்ள அடுத்ததாக வீட்டிற்குள் நுழைந்த நிக்சனிடம் பேசி அவரின் ஒப்புதலை பெற்றவர். அதன் பிறகு வந்த வினிஷாவிடம் கேப்டன் பதவிக்காக பேசிய சமயம், நேரம் கடந்துவிட்டதால் பிரதீப்பிடமிருந்து கேப்டன் பேட்ச் மணிசந்திராவிடம் சென்றது.

முதல் வாரத்திலேயே யுகேந்திரனும், விசித்ராவும் பிக்பாஸ் ரூல்ஸை மீறவே அவர்கள் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் வாங்கிய மளிகை கடனை அடைப்பதற்கு ஸ்மால் பாஸ் வீட்டிலிருப்பவர்கள் இருவரை பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பிவைக்க பிரதீப் வாதிட்டதிலிருந்து அவரது விளையாட்டு ஆரம்பித்தது.

பிறகு தனக்கு சிக்கன் ப்ரை வேண்டும் என்று மற்ற போட்டியாளர்களிடம் போட்டியிட்டு அனைவரின் வெறுப்பை சம்பாதித்துக்கொண்டார். இவரை பாம்பு என்று தாண்ட முடியாது பழுதை என்று மிதிக்கமுடியாது என்று நினைத்த போட்டியாளர்களுக்கு இவர், எப்போது அமைதியாக இருப்பார்? எப்போது அடுத்தவரிடம் பிரச்னைக்கு செல்வார் என்று அங்கிருப்பவர்கள் குழம்பியது நன்றாகவே தெரிந்தது.

தனது பெட்டில் காற்று வரவில்லை என்று விசித்திரா பெட்டில் படுக்கலாமா? என்று கேட்டு விசித்திராவிடம் வாங்கி கட்டிக்கொண்டார்.

பவா செல்லதுரை எச்சில் துப்பிய விவகாரத்தை அம்பலப்படுத்தி மக்களை திருப்பி பார்க்கவைத்தவர். ஜோவிகா சுசித்திரா பிரச்னையில் ஜோவிகாவின் தைரியத்தையும், அவளின் விளையாட்டையும் பாராட்டியவர்.

டாஸ் ஒன்றில் தோல்வியடைந்தால் பெண்களின் மேக்கப் பொருட்களை பிக்பாஸ் எடுத்துச்செல்வதாக கூறவே... அந்த டாஸ்க்கில் தோற்றுவிடலாம், அப்போதுதான் பெண்களின் உண்மையான முகம் தெரியவரும். அதனால் அவர்களது ஓட்டு குறையும் என்று ரொம்பவும் யோசித்து கருத்தை சொல்லி கமலினால் வாங்கிக் கட்டிக்கொண்டவர்.

கடவுளை பற்றி கூட ஒரு கருத்தை இவர் கூறியிருந்தார். திருக்குறளில் அகர முதல என்ற குறளில் அ என்ற எழுத்து எழுத்துக்கெல்லாம் முதல் எழுத்து. ஆனால் எல்லா எழுத்துக்களிலும் அதுவும் ஒன்று. அதனால் அ என்பது கடவுள் இல்லை. அதேபோல் நமது உடலிலும் பல பூச்சிகள் (பாக்டீரியா) இருக்கு ஆனால் அதற்கு நாம் கடவுள் அல்ல... அதுவும் நம்முள் ஒன்று. அதேபோல் தான் கடவுளும் நமக்குள்ளேயே தான் இருக்கிறார்” என்றார். யோசிக்கவைத்த செய்திதான்.

அதே போல் கடந்த வாரம் அகம் டீவியின் வழியாக அகத்திற்குள் வந்த கமலிடம், அவரவர்கள் வாங்கிய ஸ்நாக்ஸை அவர்களே பதுக்கிக் கொள்கிறார்கள் என்று போட்டுக்கொடுத்தார். யார் அது? என்று கமல் கேட்கவே, விஷ்ணுவை காட்டினார். இதை எதிர்பார்க்காத விஷ்ணு, ஆமா சார், நான் வச்சுருந்தேன், ஆனால் அதை சாப்பிட்டது பிரதீப்தான் என்று சொன்னதும் அரங்கமே அதிர்ந்தது. அதேபோல் மற்ற போட்டியாளார்களை தன்னை விட்டு இரண்டடி தள்ளியே நிக்கவைக்கிறார் பிரதீப்.

அவர் அடிக்கடி ’சாவடிச்சுடுவேன்’ என்ற வார்த்தை பயன்படுத்துவது குறித்து கமலிடம் போட்டுக்கொடுத்தார் பூர்ணிமா. ‘இது வெறும் வார்த்தைதான்’ என்பது போல இதற்கும் கமல் பிரதீப் பக்கம்தான் நின்றார்.

பூர்ணிமா இவரின் மேல் மற்றொரு குற்றச்சாட்டையும் வைத்தார். அதாவது, கூல் சுரேஷை 24 அடி உயரத்திலிருந்து கீழே பிடித்து தள்ளிவிடணும், கீழே இருக்கிற கம்பியில் சுரேஷின் உடம்பு சொருகிக்கும், பிறகு அவர் மூஞ்சியில் குத்து குத்தென்று குத்தணும் என்று கூறியதாக கமலிடம் சொன்னார். இதற்கு கமல் மட்டுமே இல்லை, கூல் சுரேஷும் சிரித்தார்.

ஏன்யா இந்த கொடூர சிந்தனை? என்ற எண்ணம் எல்லார் மனதிலேயும் எழுந்தது.

கேப்டன் விஜய் மீது பிரதீப்பின் ஷூ படவும், பிரதீப் அதை வேண்டுமென்றே செய்ததாக கூறி “வெளியில வருவல்ல.. உன்ன பாத்துக்குறேன்” என்ற ரீதியில் விஜய பேசவும், அப்போதும், கமல் பிரதீப் பக்கம் நின்று விஜய்க்கு strike card தந்தார்.

அதன்பிறகு பிரதீப் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு சென்று கூல் சுரேஷிடம் ஒரு ப்ளானை சொல்கிறார். “நான் மனசுக்குள்ள ஒரு ப்ளான் வச்சு இருக்கேன். அதன்படி தான் இனி எல்லோரிடம் விளையாடப்போகிறேன். இங்க இருக்குற பணக்காரங்களை வெளியில போக வைக்கணும், ஏழை பசங்களதான் இந்த விளையாட்டுல வெற்றி பெறணும். ” என்றார். இதைக்கேட்ட கூல் சுரேஷ் இவன் நம்மை வச்சு விளையாடுவான் போலேயே... என்று நினைத்து அந்த இடத்தை விட்டு அகன்றார்.

சொன்னதுபோல நிக்சனை அனைவரும் தெரிந்துகொள்ள அவரை வைத்து நேற்று ஒரு விளையாட்டு விளையாண்டார். “ உனக்கு ஏதும் தெரியல, உன் பேரு கூட இங்கிருக்கிறவங்களுக்கு சரியா தெரியல... என்று” நிக்சனின் மனதை புண்படுத்தும் வகையில் பேசிய பின் நிக்சனிடம், “நான் உன் நல்லதுக்கு தான் சொன்னேன். உன் நிறமையை நிரூபிச்சுகாட்டு அப்போதான் நீ நிக்கமுடியும் “ என்று கூறியிருக்கிறார்.

அனேகமாக இவர்தான் பிக்பாஸ் சீசன் முடியும் வரை இருப்பார் என்றும் மக்களுக்கு பிரதீப் மேல் ஒரு சாப்ட் கார்னர் இருக்கிறது என்பதையும் மறுக்கமுடியாது. இன்னும் 90 நாட்கள் இருக்கின்ற நிலையில் நமக்கு பிரதீப் எத்தனை கண்டெண்ட் கொடுக்கிறார் என்பதை பார்க்கலாம்.