இயக்குநர் பிரபுதேவா இயக்கத்தில் பாலிவுட் முன்னணி நடிகர் சல்மான் நடிக்கும் ‘ராதே’ படத்தின் இறுதிக்கட்டப் படபிடிப்பில் கலந்துகொள்வதற்காக நடிகர் பரத் மும்பை புறப்பட்டுச் சென்றுள்ளார்.
சல்மான்கான், திஷா பதானி, ஜாக்கி ஷெராப் உள்ளிட்டவர்கள் நடிக்கும் ’ராதே’ படம் கடந்த ஆண்டு துவங்கப்பட்டு இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகை அன்று வெளியாவதாக இருந்தது.
கடந்த ஜூலை மாதம் வெளியாகவிருந்த நிலையில் மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கால் கடந்த ஆறு மாதமாக படபிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மத்திய அரசு சமீபத்தில் சினிமா ஷுட்டிங்கிறான விதிமுறைகளை தளர்த்தியது. அதனால், ஷூட்டிங் ஸ்பாட்டுகள் பிஸியாகியுள்ளன.
இந்நிலையில் ’ராதே’ படத்தின் இறுதிக்கட்டப் படபிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. இப்படத்தில், பாலிவுட்டின் முன்னணி ஹீரோ சல்மான்கானுக்கு வில்லனாக நடிக்கிறார் என்பதால் பரத் மும்பை புறப்பட்டுச் சென்றுள்ளார் என்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே, ’செல்லமே’ படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்து மிரட்டியிருப்பார் பரத். அதன்பிறகு, ஹீரோவாக நடித்து வந்தவர், மீண்டும் ‘ராதே’ படத்தில் வில்லனாக நடிக்கவிருக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு பரத் ஹீரோவாக நடித்த ’காளிதாஸ்’ வெளியாகி பெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.