சினிமா

கதாநாயகனாக கிருஷ்ணா.. தமிழில் ரீமேக் ஆகும் ‘பெல் பாட்டம்’!

webteam

கன்னடத்தில் வெற்றிபெற்ற ‘பெல் பாட்டம்’ தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

கன்னடத்தில் ஜெயதீரா இயக்கி வெற்றியடைந்த ‘பெல் பாட்டம்’ படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இப்படத்தை ‘கழுகு 2’, ‘மடை திறந்து’, ‘1945’, போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் சத்யசிவா இயக்குகிறார்.

கதாநாயகனாக நடிகர் கிருஷ்ணா நடிக்க உள்ளார். இவருக்கு ஜோடியாக ‘சாட்டை’, ‘மகா முனி’, ‘மதுர ராஜா’ போன்ற படங்களில் நடித்த மகிமா நம்பியார் நடிக்க இருக்கிறார். மேலும் ‘பருத்தி வீரன்’ போன்ற படங்களில் நடித்த சரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் கிருஷ்ணா தன்னை ஒரு உளவாளியாக நிலைநிறுத்திக் கொள்ள ஒரு வழக்கை கையில் எடுக்கிறார். அந்த வழக்கு அவரை அடுத்தடுத்த மர்மங்களுக்கு இட்டுச் செல்கிறது. இதற்கு இடையே நடக்கும் சம்பவங்களை கதையாக கோர்த்திருக்கிறார் இயக்குநர் சத்யசிவா.

கிட்டத்தட்ட படப்பிடிப்பு முழுவதையும் முடித்த படக்குழு படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இது குறித்து படத்தின் இயக்குநர் சத்யசிவா பேசியபோது “ கழுகு மற்றும் கழுகு 2 படங்களில் கிருஷ்ணாவுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். அதனால் அவரது நடிப்பு திறமை பற்றி எனக்கு தெரியும். அவருடன் மறுபடியும் பணியாற்றியது மிகவும் நல்ல அனுபவமாக இருந்தது” என்றார்.