சினிமா

அதிக விலைக்கு டிக்கெட் விற்பனையா? விஜய் ரசிகர்கள் திடீர் சாலை மறியல் - போலீசார் தடியடி!

சங்கீதா

நடிகர் விஜயின் ‘பீஸ்ட்’ திரைப்படம் வெளியாக உள்ளநிலையில், டிக்கெட் விலை குறிப்பிடாமல் அதிக விலைக்கு விற்பனை செய்வதாகக் கூறி, அவரது ரசிகர்கள் கடலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் புதுநகர் காவல் நிலையம் அருகே உள்ள திரையரங்கில் வருகிற 13-ம் தேதி விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் வெளியாக உள்ளது. இதையடுத்து திரையரங்குகளில் படத்திற்கான முன்பதிவு துவங்கியுள்ளது. இந்நிலையில் இந்த திரையரங்கில் டிக்கெட் வாங்க வந்த விஜய் ரசிகர் மன்றத்தினர் திரையரங்கம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திரையரங்கம், ரசிகர்களுக்கான டிக்கெட்டை தருவதில்லை என்றும், டிக்கெட்டின் விலை குறிப்பிடவில்லை எனவும், அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கூறி, விஜய் ரசிகர்கள் திடீரென சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து கடலூர் புதுநகர் காவல்துறையினர் வந்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். எனினும் சாலையிலிருந்து விஜய் ரசிகர்கள் எழாத காரணத்தினால், போலீசார் அவர்கள் மீது லேசான தடியடி நடத்தி விரட்டி அடித்தனர்.

இதில் 10-க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்களை போலீசார் கைது செய்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதன் பிறகு போக்குவரத்து சீரானது. திரையரங்கில் கொடுக்கப்பட்ட டிக்கெட்டில் எந்தவிதமான விலையும் குறிப்பிடப்படாமல், 200 - 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக விஜய் ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.