சினிமா

’பீஸ்ட்-க்காக கஷ்டப்பட்டு நடிக்க நான் தயார்' என்றார் விஜய் : நெல்சன் திலீப்குமார் பேட்டி

sharpana

‘பீஸ்ட்’ படக்குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ‘பீஸ்ட்’ வரும் 13 ஆம் தேதி (நாளை) தியேட்டர்களில் வெளியாகிறது. இதனையொட்டி, நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், இயக்குநரும் நடிகருமான செல்வராகவன், நடிகை பூஜா ஹெக்டே, இயக்குநர் நெல்சன் திலீப்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய, நெல்சன் திலீப்குமார்,

”’பீஸ்ட்’ படத்தின் வேலைகள் non stop ஆக நடைபெற்றது. படம் முழுவதும் செட் அமைத்துதான் எடுத்தோம். ஒரு இடத்தில் படப்பிடிப்பு நடக்கும்போது அடுத்த இடத்தில் செட் அமைக்க வேண்டிய கடின வேலைகள் இருந்தது. அதை கிரண் சிறப்பாக செய்து கொடுத்தார். பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது. அதை நாளை பாருங்கள். படத்தில் நடித்த அனைவரும் ரிகர்ஸல் எடுத்துக்கொண்டு நடித்தார்கள். ஒரு குற்றச்சாட்டும் முன்வைக்கவில்லை.

இந்தப் படத்தில் விஜய்யுடன் நடிக்க புதிய ஜோடி தேவைப்பட்டது. அதனால், பூஜா ஹெக்டேவை தேர்வு செய்தோம். வேலை நேரம் அதிகமாக இருந்தாலும் எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் நடித்து கொடுத்தார்.

’பீஸ்ட்’ படம் பார்த்த நடிகர் விஜய், இயக்குநர் செல்வராகவனின் கதாபாத்திரம் பிடித்திருந்ததாக கூறினார். என்ன சொன்னோமோ அதை மட்டும் செய்து கொடுத்தார் செல்வராகவன். அவர் மிகவும் புத்திசாலித்தனமான மனிதர்.

‘பீஸ்ட்’ படத்திற்கு விஜய்தான் தொடக்கப் புள்ளி. கதை கேட்டுவிட்டு கஷ்டப்பட்டு நடிக்க நான் தயார். மீதியை நீங்கள் பார்த்துகொள்ளுங்கள் என்றார். எதேனும் படப்பிடிப்பில் பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதை விஜய் சரி செய்துகொடுத்து உதவியாக இருந்தார்” என்று கூறினார்.