`Jan.E.Man' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சிதம்பரம். இவர் இரண்டாவதாக இயக்கிய `மஞ்சுமல் பாய்ஸ்' படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். இவரின் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையில், `பாலன்' என்ற புதுமுக நடிகர்கள் நடிக்கும் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ’ஆவேசம்’ இயக்குநர் ஜீத்து மாதவன் கதை எழுதியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
பாலிவுட் இயக்குநரான ராம் கோபால் வர்மா, இயக்குநர் சிதம்பரத்தைச் சந்தித்தது பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் "மிகப்பெரிய வெற்றிப்படமாக `மஞ்சுமல் பாய்ஸ்' படத்தின் இயக்குநர் சிதம்பரத்துடன் நான். வரவிருக்கும் அவரது `பாலன்' படத்தின் சிறிய பகுதிகளைப் பார்த்தேன். அது வெறுமனே அற்புதம் எனச் சொல்லிட முடியாது, அதையும் தாண்டி அதி அற்புதமானது" என பதிவிட்டிருந்தார். அதனை தொடர்ந்து மீண்டும் அப்படம் பற்றி பதிவிட்ட அவர், "நான் பார்த்தவரையில் ’பாலன்’ படம், திரையுலகையே உலுக்கும் ஒரு படமாக இருக்கும்" என்றார்.
இந்தப் படத்தின் மீது ஏற்கெனவே பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், ராம் கோபால் வர்மாவின் எக்ஸ் பதிவும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. படமும் சீக்கிரமே வெளியாகவுள்ளது. ’பாலன்’ படத்த்துக்கு பின் இந்திப் படம் ஒன்றை இயக்கும் வேலைகளில் இருக்கிறார் சிதம்பரம். அதன் வேலைகள் விரைவில் துவங்கவுள்ளன.