சினிமா

அளவுக்கு மீறிய கொண்டாட்டம்! பாலகிருஷ்ணா படக் காட்சியின்போது திடீரென பற்றி எரிந்த ஸ்கிரீன்!

சங்கீதா

பாலகிருஷ்ணாவின் ‘வீர சிம்ஹா ரெட்டி’ பட திரையிடலின்போது, ரசிகர்கள் சிலர் திரைக்கு தீ வைத்ததாக பரவி வரும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நந்தாமூரி பாலகிருஷ்ணா இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘வீர சிம்ஹா ரெட்டி’. இந்தப் படத்தில் ஹனி ரோஸ், ஸ்ருதிஹான், வரலக்ஷமி சரத்குமார், துனியா விஜய், லால் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். பொங்கலை முன்னிட்டு நேற்று உலகம் முழுவதும் வெளியான இந்தப் படம் முதல் நாளில் 35 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நமது இந்தியாவில் சினிமா நடிகர்கள் என்றாலே ரசிகர்களுக்கு தனிக் கொண்டாட்டம் தான்.

அதுவும் ரசிகர்களுக்கு பிடித்தமான நடிகர்களின் படங்கள் வெளியாகிறது என்றால் போதும் அவ்வளவுதான். திருவிழாக் கோலம் திரையரங்குகள் எல்லாம் களைகட்டிவிடும். அந்தக் கொண்டாட்டம் மகிழ்ச்சியோடு நின்றால் பரவாயில்லை. அதையும் மீறி உணர்ச்சிவசத்தில் சில சயமங்களில் ரசிகர்கள் செய்யும் செயலால் யாராவது பாதிப்புக்குள்ளாகுவது உண்டு.

அந்தவகையில், விசாகப்பட்டினம் சம்பவரம் பகுதியில் உள்ள திரையரங்கு ஒன்றில் பாலகிருஷ்ணாவின் ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தை அளவுக்கடந்த கொண்டாட்டத்துடன் ரசிகர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென திரையரங்கு திரை தீப்பிடித்துக்கொண்டு ஒரு பகுதி எரியத் தொடங்கியது. கொண்டாட்டத்தின்போது உணர்ச்சிவசப்பட்டு ரசிகர்கள் சிலர் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் எப்படி திரை எப்படி தீப்பிடித்தது என்று இதுவரை கண்டறியப்படவில்லை.

இதையடுத்து, உடனடியாக திரையரங்கில் இருந்து, பார்வையாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இதனால் சில ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். நேற்று அமெரிக்காவில் ‘வீர சிம்ஹா ரெட்டி’ படம் வெளியிடப்பட்டபோது, ரசிகர்கள் சிலர் காகிதங்களை கிழித்து, பல திரையரங்குகளை குப்பையாக்கியதால் படத்தின் காட்சி ரத்துசெய்யப்பட்டநிலையில், இன்று விசாகப்பட்டினத்தில் திரையையே தீ வைத்ததாக கூறப்படுவது பொதுமக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.