சினிமா

மறைந்த கணவரின் கட் அவுட்டுடன் வளைகாப்பு: நெகிழ்ச்சியூட்டிய நடிகை மேக்னா ராஜ்

sharpana

கடந்த 2010 ஆம் ஆண்டு ‘காதல் சொல்ல வந்தேன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் மேக்னா ராஜ். தமிழை விட இவருக்கு கன்னட சினிமாவில் அதிக வாய்ப்புகள் வரவே, அங்கு முன்னணி நடிகையானார். கன்னட சினிமாவில் தன்னுடன் நடித்த சக நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை பத்து ஆண்டுகளாக காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டுதான் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.

இவர்களின் பேரன்பின் அடையாளமாக மேக்னா ராஜ் கருவுற்றிருந்தார். அந்த சமயத்தில்தான், கடந்த ஜூன் 7 தேதி சிரஞ்சீவி சார்ஜா திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். தென்னிந்திய சினிமா துறையே இவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தியது. காரணம், சிரஞ்சீவி சார்ஜா கன்னட சினிமாவில் முன்னணி நடிகர் மட்டுமல்ல. நடிகர் அர்ஜுனின் அக்கா மகன் என்பது குறிப்பிடத்தக்கது. மேக்னா ராஜூம் ’வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் நடித்திருந்த  நடிகை பிரமிளாவின் மகள்.

மேக்னா ராஜ் – சிரஞ்சீவி சார்ஜா சந்தோஷமான வாழ்க்கைக்கு அவர்களின் சமூக வலைதளங்களே சாட்சி. பெருங்காதலை வெளிப்படுத்தும் படங்களை அடிக்கடி பகிர்ந்துகொண்டே இருப்பார்கள். ஆனால், இவர்களின் பெருங்காதல் சிரஞ்சீவி சார்ஜாவின் மறைவால் பெருஞ்சோகத்தில் முடிந்தது எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

உயிரற்று கிடத்தப்பட்டிருந்த சிரஞ்சீவி சார்ஜாவின் உடலைப் பிடித்து மேக்னா ராஜ் அழுதது எல்லோரது இதயத்தையும் கசிய வைத்தது. மறக்கவே முடியாத துயரக்காட்சி அது.இந்நிலையில், கர்ப்பிணியாக மேக்னா ராஜ் தனது வளைகாப்பு படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில்,மேக்னா ராஜ் அமர்ந்திருக்க, அவரது அருகில் மறைந்த சிரஞ்சீவி சார்ஜா ஆளுயர கட் அவுட்டுடன் புன்னகைக்கிறார்.

பார்ப்போரை உருக வைக்கும் இந்தப் படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கணவரின் கட் அவுட்டுடன் வளைகாப்பு கொண்டாடி நெகிழ்ச்சியூட்டிய மேக்னா ராஜூக்கு எல்லோரும் ஆறுதலையும் அன்பையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.