சினிமா

வெற்றிமாறனின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

webteam

வெற்றிமாறனின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் ‘அசுரன்’. இப்படம் திரை ரசிகர்களை கடந்து பல்வேறு தரப்பினரையும் கவர்ந்தது. எழுத்தாளர் பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தை கண்டு ரசித்த திமுக தலைவர் ஸ்டாலின், அவரது ட்விட்டர் பக்கத்தில் “பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்” என வாழ்த்தி இருந்தார்.

இந்நிலையில் வெற்றிமாறனின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் நாயகனாக சூரி நடிக்க உள்ளார். இந்தத் தகவல் முன்பே வெளியாகியிருந்தாலும் இந்தச் செய்தி உறுதி செய்யப்படவில்லை. இப்போது இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஆர்எஸ் இன்ஃபோடெய்மெண்ட் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக செய்தியை பதிவிட்டுள்ளது. 

அதில், “நாங்கள் மகிழ்ச்சிகரமான அறிவிப்பை வெளியிடுகிறோம். உலகத்தரமான இயக்குநர் வெற்றிமாறனுடன் எங்களின் 14வது படத் தயாரிப்பு மூலம் இணைகிறோம். அதனை எல்ரெட் குமார் தயாரிக்க உள்ளார். விரைவில் இந்தப் படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் குறித்த தகவலை அறிவிப்போம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தின் வெளியான ‘அசுரன்’ 100 கோடியை உலகம் முழுக்க ஈட்டி உள்ளது என்பது குறிப்படத்தக்கது.