‘அருவி’ படம் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதல்ல.. இருந்தும் யாராவது காயப்பட்டிருந்தால் தங்கள் வருத்தத்தை தெரிவித்துக்கொள்வதாக அதன் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்திருக்கிறார்.
அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் அதிதி பாலன், கவிதா பாரதி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான படம் ‘அருவி’. சமூக வலைத்தளங்களில் இப்படத்தை புகழ்ந்து பலரும் கொண்டாடி வருகின்றனர். ஆனால் ஒருசில எதிர்ப்புகளும் படத்திற்கு எழுந்துள்ளன. குறிப்பாக விஜய் ரசிகர்கள், படத்தில் இடம்பெற்றுள்ள வசனத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தில் விஜய்யை கிண்டல் செய்யும் விதமாக ஒரு சில வசனங்கள் வரும், அதில் ‘விஜய் நடித்ததில் நல்ல படம், எப்படி கண்டுப்பிடிப்பது?’ என கூறியிருப்பார்கள். இதற்கு விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் ‘அருவி’ படம் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதல்ல என அதன் தயாரிப்பாளர் விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ அருவி- இது அன்பை, மனிதத்தை பறைசாற்றும் நோக்கில் மட்டுமே எடுக்கப்பட்ட படம். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதல்ல. இருந்தும், யாராவது காயப்பட்டிருந்தால் எங்கள் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்” என கூறியுள்ளார்.