அறிமுக இயக்குனர் இன்னிசை பாண்டியனின் இயக்கத்தில் நடிக்க உள்ளார் அருள்நிதி.
வம்சம், மௌனகுரு, டிமாண்டி காலணி, இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்ற மாறுபட்ட கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து, அதில் வெற்றியும் கண்டு வருபவர் அருள்நிதி. சமீபத்தில் ஜீவாவுடன் இவர் இணைந்து நடித்த 'களத்தில் சந்திப்போம்' திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் அருள்நிதியின் அடுத்த திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈரம், குற்றம் 23 திரைப்படத்தின் இயக்குநர் அறிவழகன், இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இன்னிசை பாண்டியன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் அருள்நிதி. அஜய் ஞானமுத்துவின் முதல் திரைப்படமான 'டிமாண்டி காலணி' யில் நடித்ததை போலவே, அவரின் உதவி இயக்குநர் இன்னிசை பாண்டியனின் முதல் திரைப்படத்திலும் நடிக்க உள்ளார் அருள்நிதி.
அருள்நிதி நடிக்கும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை வெளியானது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம்பெற்ற அருள்நிதியின் கெட்டப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு கிடைத்துள்ள வரவேற்புக்கு நன்றி தெரிவித்து ட்விட் செய்துள்ளார் படத்தின் இயக்குநர் இன்னிசை பாண்டியன்.