ரஜினிகாந்த் உடன் இணைந்து பணியாற்றுவது குறித்து நடிகர் விஜய் தன்னிடம் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொண்டதாக இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் கூறியுள்ளார்.
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ‘தர்பார்’. அந்தப் படத்தை இயக்குவதற்கு முன்பு முருகதாஸ், நடிகர் விஜயை வைத்து ‘சர்கார்’ படத்தை இயக்கி இருந்தார். அந்தப் படம் தமிழக அரசியலில் பெரும் வரவேற்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில்தான், ஏ.ஆர்.முருகதாஸ் ரஜினியின் படத்தை இயக்க சென்றார். அந்தப் படத்தை வேறு யாராவது இயக்கி இருந்தால் தாமதமாகி இருக்கும், முருகதாஸ் என்பதால் குறித்த நேரத்தில் மிகச் சரியாக முடித்து கொடுத்தார் என இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது ரஜினிகாந்த் குறிப்பிட்டிருந்தார்.
தற்சமயம் ‘தர்பார்’ படம் ரிலீஸுக்கு தயாராகி விட்டது. வரும் ஆண்டு ஜனவரி மாதம் 9 தேதி பொங்கல் பண்டிகையையொட்டி இந்தப் படம் திரைக்கு வரவுள்ளது. ஆகவே முருகதாஸ் பட புரமோஷனுக்கான வேலைகளில் மும்முரமாக உள்ளார். படம் குறித்து ஊடகங்களை சந்தித்து பேட்டியும் வழங்கி வருகிறார்.
இந்தப் படத்தில் வேலை செய்வதற்கு முன்னால் விஜயுடன் பணியாற்றிய போது அவர் ரஜினியுடன் பணிபுரிவது குறித்து ஒரு கருத்தை பகிர்ந்து கொண்டதை முருகதாஸ் இப்போது குறிப்பிட்டுள்ளார். ‘இயக்குநராக ஒருவர் ரஜினிகாந்த் உடன் பணியாற்றிவிட்டால் அவரது இயக்குநர் பணி முழுமை பெற்றுவிடும்” என விஜய் முன்பே கூறியிருந்ததாக முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
அப்படியென்றால் விஜயின் கருத்துபடி இயக்குநர் முருகதாஸின் சினிமா வாழ்க்கை ஒருநிறைவை அடைந்துவிட்டதாக மறைமுகமாக தெரிவித்துள்ளார் என அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். ரஜினி நடிப்பில் தயாராகி உள்ள ‘தர்பார்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, நிவேதிதா தாமஸ், தம்பி ராமையா என பலர் நடித்துள்ளனர்.