‘பேட்ட’யை அடுத்து ரஜினிகாந்த், புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாக உள்ளதாக தகவல் கசிந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் மோஸ்ட் வாண்டெட் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். இவர் நடிகர் விஜய்யை வைத்து இயக்கும் ‘சர்கார்’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிந்துவிட்டன. இறுதிகட்ட போஸ்ட் புரடெக்ஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இரு தினங்களுக்கு முன்புதான் இப்படத்தின் முதல் பாடலான ‘சிம்டாங்காரன்’ வெளியானது. ஒரு பிரிவினர் இந்தப் பாடலின் வரிகள் புரியவில்லை என்றும் ஒரு பிரிவினர் ‘மாஸ்’ பாடல் என்றும் கொண்டாடி வருகிறார்கள். இதனிடையே ‘சிம்டாங்காரன்’ என்ற வார்த்தை குறித்து பாடலாசிரியர் விவேக் அவரது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்திருந்தார். இந்தப் படம் இந்த வருடம் தீபாவளி அன்று உலகெங்கும் திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து இயக்க போகும் படம் குறித்து தகவல் கசிந்துள்ளது. தற்சமயம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் ‘பேட்ட’ படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அந்தப் படத்தை அடுத்து முருகதாஸ் இயக்க உள்ள படத்தில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. ஆனால் இந்தத் தகவலை முருகதாஸ் இன்னும் உறுதி செய்யவில்லை. ‘பேட்ட’ படத்திற்குப் பிறகு முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என தமிழருவி மணியன் உட்பட பலர் கருத்து கூறி வரும் போது ரஜினி மீண்டும் ஒரு படத்தில் ஒப்பந்தமாக உள்ளார் எனற தகவல் வழக்கம் போல அவரது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை உருவாகியுள்ளது.