சினிமா

பாலியல் குற்றச்சாட்டை மறுத்த அனுராக் காஷ்யப் !

webteam

பாலிவூட் இயக்குனர் அனுராக் காஷ்யப் தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகாரை மறுத்துள்ளார்.

இந்தித் திரையுலகின் பிரபல இயக்குநரான அனுராக் கஷ்யப் மீது பாலிவுட் நடிகை பாயல் கோஷ், மும்பை வெர்சோவா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், கடந்த 2013 ஆம் ஆண்டு பட வாய்ப்பு கேட்டு சென்றபோது அனுராக் கஷ்யப், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறியிருந்தார்.

அதனடிப்படையில் அனுராக் கஷ்யப் மீது காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். காஷ்யப் கைது செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, நடிகை பாயல் கோஷ் ஆகியோர் வலியுறுத்தி வந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு காவல்துறையினர் அழைப்பாணை அனுப்பினர்.

அதனை தொடர்ந்து, மும்பை வெர்சோவா காவல்நிலையத்தில் நேற்று காலை பத்துமணிக்கு அனுராக் கஷ்யப் விடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் அனுராக் கஷ்யப் தன் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுப்பதாக அவர் தரப்பு வழக்கறிஞர் பிரியங்கா கிமானி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும் போது “அனுராக் கஷ்யப் அவர் மீது வைக்கப்பட்டுள்ள அனைத்து வகையான குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். காரணம் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் இலங்கைக்கு படப்பிடிப்பு தொடர்பான பணிக்காகச் சென்றிருந்தார். அதற்கான ஆதாரங்களை அவர் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். இந்தக் குற்றசாட்டு அவரை இழிவுபடுத்துவதற்காக வைக்கப்பட்ட குற்றசாட்டு ஆகும். இந்தச் சம்பவத்தால் அவர் மட்டுமல்லாது அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்" என்றார்.