`Mana Shankara Vara Prasad Garu' படத்தின் வெற்றிக்குப் பிறகு சிரஞ்சீவி தன்னுடைய அடுத்த படத்தை துவங்கி இருக்கிறார். `Waltair Veerayya' படத்தில் சிரஞ்சீவி உடன் இணைந்த பாபி கொல்லி, மீண்டும் இப்படத்தின் மூலம் சிரஞ்சீவி கூட்டணியில் இணைந்துள்ளார். Chiru 158 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிரஞ்சீவியின் சகோதரரும் ஆந்திரப் பிரதேச துணை முதல்வருமான பவன் கல்யாண், அவர்களது மூத்த சகோதரர் நாகபாபுவுடன் கலந்துகொண்டார்.
பவன் கல்யாண் கிளாப்போர்டை ஒலிக்க, சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதா கொனிடேலா கேமராவை இயக்கினார். இயக்குநர் வி.வி. வினாயக் முதல் காட்சியை இயக்கினார். இதன் படப்பிடிப்பு நாளை முதல் துவங்கவுள்ளது.
இப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரபல கன்னட திரைப்பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. ஜனநாயகன் படம் மூலம் தமிழிலும், பாலன் மூலம் மலையாளத்திலும் அறிமுகமாகி உள்ள இந்த நிறுவனம் தெலுங்கில் Chiru 158 மூலம் அறிமுகமாகிறது.