சினிமா

’’சிறுவயதில் நான் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டேன்’’ - அமீர்கான் மகள் ஐரா

Sinekadhara

நடிகர் அமீர்கானின் மகள் ஐரா, 14 வயதாக இருந்தபோது பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கும், அவரது முதல் மனைவி ரீனா தத்தாவிற்கும் 2002-ஆம் ஆண்டு விவாகரத்து ஏற்பட்டது. அவர்களின் மகள் 23 வயதான ஐரா கான், தான் வளர் இளம்பருவத்தில் இருந்தபோது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக இன்ஸ்டாகிராமில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட 10 நிமிட வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

அதில், ‘’நான் 14 வயதாக இருந்தபோது பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டேன். அந்த நபர் என்ன செய்கிறார் என்பது அவருக்கு தெரிகிறதா என்ற கேள்விக்கு விடைகிடைக்க நான் ஓராண்டு எடுத்துக்கொண்டேன். இதுபோன்று செய்பவர்கள் தாங்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரிந்துதான் செய்கிறார்கள். எனக்கு இது புரிந்தவுடன் உடனடியாக எனது பெற்றோருக்கு மெயில் எழுதினேன். உடனே என்னை அவர்கள் பத்திரமாக அந்த சூழ்நிலையிலிருந்து மீட்டார்கள்.

இதுகுறித்து நான் பயப்படவில்லை. அது முடிந்துவிட்டது என நான் நினைத்தேன். வாழ்நாள் முழுவதும் பயம் இல்லை என்றாலும் என்னுடைய 18-20 வயதில் எனக்கு ஏதோ தவறு நடந்துவிட்டதாக உணர்ந்தேன். என் பெற்றோர்கள் எப்போதும் எங்களை நன்றாக கவனித்துக்கொண்டார்கள். அவர்கள் விவாகரத்துப் பெற்றிருந்தாலும் அது எனக்குள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் எனக்கு சோகம் இருந்தது. ஆனால் அதற்கான காரணம் தெரியவில்லை. அதேசமயம் அப்போது யாரிடமும் பேச விரும்பவில்லை’’ எனக் கூறியுள்ளார்.

ஒரு மாதத்திற்கு முன்பே தான் 4 வருடங்களுக்கும் மேலாக மன அழுத்த பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்ததாக ஐரா குறிப்பிட்டிருந்தார்.