சமந்தா, சிட்டி பாபு, சமந்தா சிலை
சமந்தா, சிட்டி பாபு, சமந்தா சிலை இன்ஸ்டாகிராம்
சினிமா

‘அவருக்கு வயசாகிடுச்சு’ - தயாரிப்பாளர், சமந்தா மோதலுக்கிடையே கோயில் கட்டிய ரசிகர்!

சங்கீதா

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் கடைசியாக நடித்த ‘சாகுந்தலம்’ திரைப்படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை என்று கூறப்படுகிறது. விமர்சன ரீதியாகவும் பெரிதாக ரசிகர்களை அந்தப் படம் கவரவில்லை. 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் 10 கோடி ரூபாயை தாண்டவில்லை என்று சொல்லப்படுகிறது.

சாகுந்தலம் பட போஸ்டர்

சமந்தாவுக்கு கோயில்:

இந்தநிலையில், ஆந்திரப்பிரதேச மாநிலம் பாபட்லா மாவட்டத்தைச் சேர்ந்த தெனாலி சந்தீப் என்பவர் சமந்தாவுக்கு, கோயில் ஒன்றைக் கட்டியுள்ளார். அவரது வீட்டின் ஒரு பகுதியில் எழுப்பப்பட்டிருக்கும் இந்தக் கோயிலில் சமந்தாவின் சிலை வடிவமைக்கப்பட்டுள்ள புகைப்படம் வெளியாகியிருக்கிறது. சமந்தாவின் தீவிர ரசிகர் என்றாலும், அவரது திரைப்படங்களைவிட, அவரின் பிரதியுஷா அறக்கட்டளை மூலம் நடிகை சமந்தா செய்துவரும் நற்பணிகள் தன்னை ஈர்த்ததாலேயே இந்தக் கோயிலை கட்டியுள்ளதாக தெனாலி சந்தீப் கூறியுள்ளார். சமந்தாவின் பிறந்த தினம் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு இந்தக் கோயில் திறக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமந்தா - தயாரிப்பாளர் சிட்டி பாபு மோதல்:

இதற்கிடையில், ‘சாகுந்தலம்’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் வரவேற்பு பெறாததால், பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சிட்டி பாபு, சமந்தாவை சரமாரியாக சாடியுள்ளார். அவர் இணையதளம் ஒன்றிற்கு அளித்தப் பேட்டியில், “சமந்தாவின் கதாநாயகி அந்தஸ்து முடிந்துவிட்டது. அதனால் அவரால் மீண்டும் நட்சத்திர அந்தஸ்துக்கு திரும்ப முடியாது. ஒவ்வொரு முறையும் சென்டிமென்ட் வேலை செய்யாது. கதாபாத்திரமும், படமும் நன்றாக இருந்தால் மக்கள் அதனை பார்க்க வருவார்கள்.

அவருக்கு நோய் எல்லாம் வெறும் நாடகம். அவரது உடல்நிலையை காரணம் காட்டி அனுதாபத்தை வைத்து அவரது படங்களுக்கு விளம்பரம் தேட முயற்சிக்கிறார். இவை அனைத்தும் மலிவான மற்றும் பைத்தியக்காரத்தனமான செயல்கள். கதாநாயகி அந்தஸ்தை இழந்த சமந்தாவை, சகுந்தலா கதாபாத்திரத்திற்கு எப்படி தேர்வு செய்தார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. சாகுந்தலம் படத்தில் அவரின் தேர்வில் எனக்கு விருப்பமில்லை” என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

தயாரிப்பாளர் சிட்டி பாபுக்கு சமந்தா பதிலடி:

இதையடுத்து நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தயாரிப்பாளர் சிட்டி பாபுவை சூசகமாக விமர்சித்திருந்தார். அதில், ஒருவருக்கு காது மடல்களில் அதிகளவு எதற்காக முடி வளர்கிறது என்று கூகுளில் தேடியபோது கிடைத்தப் பதில் என்று ஒரு ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்து இருந்தார். மேலும், அது யார் என உங்களுக்கு தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். தயாரிப்பாளர் சிட்டி பாபுக்கு காது மடல்களில் அதிகளவு முடி வளர்ந்து இருப்பதை சுட்டிக்காட்டியே நடிகை சமந்தா இவ்வாறு தெரிவித்திருந்தார்.

சமந்தா இன்ஸ்டாகிராம் ஸ்கிரீன்ஷாட்

நடிகை சமந்தாவுக்கு தயாரிப்பாளர் சிட்டி பாபு பதிலடி:

இதனைத் தொடர்ந்து யூட்யூப் தளம் ஒன்றிற்கு பேட்டியளித்த தயாரிப்பாளர் சிட்டி பாபு, “தற்போது சமந்தாவிற்கு 18-20 வயதல்ல. கொஞ்சம் வயதாகிவிட்டது. அதனால், பேரழகி சகுந்தலா கதாபாத்திரத்திற்கு அவர் பொருத்தமானவராக இருக்கமாட்டார் என்றே கூறினேன். அவரின் கதாநாயகி நாட்கள் கடந்துவிட்டது. இதனால், குணசித்திர கதாபாத்திரங்களில் அவர் நடிக்கலாம். ஆனால், இதனை சமந்தா ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. எனது காது மடல்களில் வளரும் முடியை கவனித்துள்ள அவர், அதுகுறித்து ஆய்வுசெய்து அறிக்கை அளிப்பதில் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தாவிற்கு சிகிச்சை:

இந்த சர்ச்சைகளுக்கிடையே நடிகை சமந்தா, தனக்குள்ள மையோசிடிஸ் உடல்நல பிரச்சனைக்கான hyperbaric oxygen therapy என்ற சிகிச்சை எடுத்து வரும் புகைப்படத்தை தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், பெப்ஸி குளிர்பான புதிய விளம்பரத்தில், இன்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை பற்றிய விஷயங்களை பேசியுள்ள விளம்பரத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.