சினிமா

’வாழ்க்கையில் யார் பிரிந்தாலும்...’ நடிகை இலியானா திடீர் தத்துவம்!

webteam

’வாழ்க்கையில் இருந்து யார் பிரிந்து சென்றாலும் உங்களை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்’ என்று நடிகை இலியானா, பூடகத் தத்துவத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிந்துள்ளார்.

தமிழில், கேடி, விஜய்யின் ’நண்பன்’ படங்களில் ஹீரோயினாக நடித்தவர் இலியானா. தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ள அவர், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண்ட்ரு நீபோன் என்பவரை காதலித்து வந்தார். தனது காதல் பற்றி வெளிப்படையாக இலியானா கூறவில்லை என்றாலும் இருவரும் ஒன்றாகச் சுற்றும் புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் வெளியாயின. பின்னர் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களும் பரபரப்பாகப் பேசப்பட்டன. இருவரும் திருமணம் செய்துகொண்டதாகவும் தகவல்கள் வெளியாயின. 

இந்நிலையில் நடிகை இலியானாவுக்கும் ஆண்ட்ருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் பின் தொடர்வதை நிறுத்திவிட்டனர்.

 கடந்த ஜூலை 31 ஆம் தேதி ஆண்ட்ரு தனது 31 வது பிறந்த தினத்தைக் கொண்டாடியபோது, அவருக்கு காதல் மெசேஜ் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார், இலியானா. சமீபத்தில் அதையும் ஆண்ட்ருவின் புகைப்படங்களையும் தனது பக்கத்தில் இருந்து நீக்கினார்.

இந்நிலையில், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பூடகமான தத்துவப் பதிவு ஒன்றை இலியானா வெளியிட்டுள்ளார். அதில், ’வாழ்க்கையில், நீங்கள் நண்பர்களை, குடும்பத்தினரை, பார்ட்னரை இழக்கலாம். உங்கள் வாழ்க்கையில் யார் பிரிந்தாலும் உங்களை நீங்கள் இழந்துவிடாதீர்கள். உங்கள் மீது அன்பு செலுத்துவது எப்படி என்பதை கற்றுக்கொள்ள வேண்டியது முக்கியம். உங்களைச் சுற்றியுள்ளவர்களால் நீங்கள் நேசிக்கப்படாதவராக உணரும்போது உங்களுக்கு நீங்களே அன்பு செலுத்துங்கள்’ என்று கூறியுள்ளார்.

காதலரை பிரிந்தபின் அவர் விரக்தியில் இப்படி பதிவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.