சினிமா

30 வருடங்களுக்குப் பின் மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கும் அமலா!

sharpana

80-ஸ் காலகட்டத்தில் தமிழின் முன்னணி நடிகையாக இருந்த அமலா 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ரஜினி, கமல், மம்முட்டி, சத்யராஜ், மோகன், பிரபு என ஸ்டார் நடிகர்களுக்கு ஜோடியாக திரையில் மின்னியவர் அமலா. ரஜினியுடன் வேலைக்காரன், மாப்பிள்ளை, கொடிப்பறக்குது என்று ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்தவர்.

கமல்ஹாசனின் ’சத்யா’ படத்தில் இடம்பெறும் வளையோசை கலகலவென பாடலில் வந்து கொள்ளை கொண்டார். 80ஸ் கிட்ஸ் மட்டுமல்ல; 90ஸ் கிட்ஸ், 2000 கிட்ஸ் என எல்லா கால கிட்ஸ்களும் ரசிக்கும் பாடல் அது. இன்றும் பலரது ஃபேவரைட் ரிங்டோனாய் செல்போன்களில் ஒலிக்கிறது.

தமிழர்களின் மனதில் நீங்காத ரீங்காரமாய் நிறைந்திருக்கும் அமலா, கடந்த 1992 ஆம் ஆண்டு நடிகர் நாகர்ஜூனாவை காதல் திருமணம் செய்து ஹைதராபாத்தில் செட்டில் ஆனார்.

இவர், தமிழில் கடைசியாக கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான ’கற்பூர முல்லை’ படத்தில்தான் நடித்திருந்தார். அதன்பிறகு, திருமணமானதால் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது, 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார் அமலா.

சிங்கம், அட்டக்கத்தி, மெட்ராஸ், நான் மகான் அல்ல, தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசி என பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்த எஸ்.ஆர் பிரபுவின் ’ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ தயாரிக்கும் படத்தில்தான் அமலா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில், ’எங்கேயும் எப்போதும்’ புகழ் சர்வானந்த், ரீத்து வர்மா, சதீஷ், ரமேஷ் திலக் ஆகியோர் நடிக்கிறார்கள்.

டி.ராஜேந்தர் இயக்கத்தில் ’மைதிலி என்னை காதலி’ படத்தில்தான் அமலா தமிழில் அறிமுகமானார். மெல்லத் திறந்தது கதவு, வெற்றி விழா, வேதம் புதிது, அக்னி நட்சத்திரம்,மெளனம் சம்மதம், நாளைய மனிதன்,உத்தம புருஷன், கொடி பறக்குது என பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்த அமலாவில் கொடிதான் 80ஸ் காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் உயரே பறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.