சினிமா

சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய இளம் நடிகர்: காரணம் என்ன?

சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய இளம் நடிகர்: காரணம் என்ன?

webteam

கே.வி.ஆனந்த் இயக்கும் ‘சூர்யா37’ படத்தில் இருந்து பிரபல தெலுங்கு நடிகர் விலகி இருக்கிறார். 

மூன்றாவது முறையாக சூர்யாவும் இயக்குநர் கே.வி.ஆனந்தும் இணையும் திரைப்படம் ‘சூர்யா37’. இந்தப் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. இந்தப் படத்தின் பூஜை ஜூன் 25ம் தேதி லண்டனில் போடப்பட்டது. அதில் சூர்யா உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பங்கேற்றனர். மேலும் முதற்கட்ட படப்பிடிப்பும் லண்டனில் தொடங்கியது. இப்படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. மோகன்லால், ஆர்யா, சாயிஷா, பாலிவுட் நடிகர் போமன் இரானி தெலுங்கு நாயகன் அல்லு சிரிஷ், சமுத்திரக்கனி  என பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இந்நிலையில் தெலுங்கு அல்லு சிரிஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தப் படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டரில், “என்னுடைய ‘ஏபிசிடி’ படத்தின் படப்பிடிப்பு தேதியும் ‘சூர்யா37’ தேதியும் ஒரே நேரத்தில் வருவதால் நான் சூர்யா படத்தில் இருந்து விலகுகிறேன். பெரிய பட்ஜெட் படம் என்பதால் வேறு தேதிகளுக்கு மாற்றி வைக்க முடியாது. இரு படங்களிலும் நடிக்க மிக ஆர்வமாகவே இருந்தேன். என் விலகல் குறித்து கே.வி.ஆனந்திடம் விளக்கினேன். அவர் என் தரப்பை புரிந்து கொண்டார். சூர்யா படத்தின் படப்பிடிப்பை மிக ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன். ஆனால் வெளியேறுகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநருக்கும் தயாரிப்பு நிறுவனம் லைகாவுக்கு மிக்க நன்றி. என் வாழ்த்துகளை முழு படக்குழுவிற்கு கூறிக்கொள்கிறேன்.” என்று பதிவிட்டிருக்கிறார்.