சினிமா

அல்லு அர்ஜுனின் `புஷ்பா 2’ படத்தில் சாய் பல்லவி? - ப்ரீ ரிலீஸ் பிசினஸ் மட்டுமே இவ்வளவா?

சங்கீதா

நடிகர் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ படத்தில் நடிகை சாய் பல்லவி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திரா - தமிழ்நாடு எல்லையில் நடக்கும் செம்மரக் கடத்தலை மையமாக வைத்து, அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘புஷ்பா - தி ரைஸ்’. சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவான இந்தத் திரைப்படம், தென்னிந்தியாவையும் தாண்டி, பாலிவுட்டிலும் மாபெரும் வெற்றிபெற்றது. 400 கோடி ரூபாய் வரை வசூலித்த இந்தப் படத்திற்குப் பிறகு அல்லு அர்ஜுன், பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ளார்.

இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா அல்லு அர்ஜுனின் ஜோடியாகவும், மலையாள நடிகர் பகத் ஃபாசில் போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருந்தனர். சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். இந்தப் பாடல் பட்டிதொட்டியெங்கும் பரவியது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ‘புஷ்பா - தி ரூல்’ என்ற இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த மாதம் ஏப்ரல் 8-ம் தேதி தனது 41-வது பிறந்தநாளை அல்லு அர்ஜுன் கொண்டாடுவதை முன்னிட்டு இந்தப் படத்தின் டீசர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டீசருக்கு முன்னதாக இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரமொன்றில் சாய் பல்லவியை நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. அவரும் ஒத்துக்கொண்டு 10 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாதம் இறுதிக்குள் அவரது போர்ஷனை ஷூட் செய்து, அதை டீசருடன் சேர்த்து வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், ‘புஷ்பா 2’ படத்தின் ப்ரீ ரிலீஸ் வியாபாரம் பற்றியும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், ‘புஷ்பா 2’ திரைப்படம் திரையரங்கு, தொலைக்காட்சி மற்றும் ஓடிடி உரிமை உட்பட ப்ரீ ரிலீஸ் வியாபாரம் மூலம் மட்டுமே ஆயிரம் கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ‘புஷ்பா 1’ திரைப்படம் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி அமோக வரவேற்பு பெற்ற நிலையில், இந்தப் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.