சினிமா

வித்தியாசமாக வரவேற்ற மகள் - அல்லு அர்ஜூனின் நெகிழ்ச்சியான பதிவு

வித்தியாசமாக வரவேற்ற மகள் - அல்லு அர்ஜூனின் நெகிழ்ச்சியான பதிவு

சங்கீதா

16 நாட்கள் கழித்து வீடு திரும்பும்போது, மகள் அளித்த வரவேற்பு குறித்த புகைப்படத்தை பகிர்ந்து, நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் அல்லு அர்ஜூன்.

தென்னிந்திய சூப்பர் ஸ்டாரான அல்லு அர்ஜூன் நடித்து கடந்த 17-ம் தேதி வெளியான திரைப்படம் ‘புஷ்பா’. இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்தியாவில் மட்டுமல்ல, குறிப்பாக வட இந்தியாவில் மாபெரும் வரவேற்பு பெற்றது. முக்கியமாக இந்தப் படத்தில் ஸ்ரீவள்ளி பாடலுக்கு அல்லு அர்ஜூனின் வித்தியாசமான நடன அசைவுகளை, ரெய்னா, டேவிட் வார்னர், பிராவோ, நஸ்முல் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் இமிடேட் செய்து தங்களது சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். வித்தியாசமான கதாபாத்திரத்தால் வட இந்தியாவில் அல்லு அர்ஜூனுக்கு தனி மார்க்கெட் உருவாகியுள்ளது. இதனால், ‘புஷ்பா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள், பிரபலங்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்பதால், அதற்கான பணிகளில் இயக்குநர் சுகுமார் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், துபாய் சென்றுவிட்டு 16 நாட்களுக்குப் பின்னர் அல்லு அர்ஜூன் வீடு திரும்பியுள்ளார். அவருக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் வகையில், அவரது மகள் ஆர்கா, வீட்டுத் தரையில் இலைகள் மற்றும் பூக்களால் ‘வெல்கம் நானா’ என்று எழுதப்பட்ட வாசகத்துடன் வரவேற்றுள்ளார்.

இதனைக் கண்டு நெகிழ்ந்த அல்லு அர்ஜூன், இதனை புகைப்படமாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘16 நாட்கள் கழித்து இனிமையான வரவேற்பு’ என்று பதிவிட்டு வெளியிட்டுள்ளார். எப்போதுமே மகள் மற்றும் தந்தைக்கான பாசம் என்பது புரிந்துகொள்ள முடியாத ஒன்று. அந்தவகையில், அல்லு அர்ஜூன் மற்றும் அவரது மகளின் அன்பைக் கண்டு ரசிகர்கள் நெகிழ்ந்து போயுள்ளனர்.