சினிமா

”நாங்கள் கருவுற்றிருக்கிறோம்” - இன்ஸ்டாவில் போட்டோ போட்டு அறிவித்த ஆலியா - ரன்பீர் தம்பதி!

JananiGovindhan

காதலர்களாக இருந்து தம்பதியாக மாறிய ஆலியா பட் - ரன்பீர் கபூர் ஜோடி தற்போது பெற்றோர்களாக மாறப்போகிறார்கள். பாலிவுட்டின் சூப்பர் டூப்பர் ஜோடியாக இருக்கும் ஆலியா - ரன்பீர் தற்போது கருவுற்றிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

கடந்த ஏப்ரல் 14ம் தேதி மும்பையில் எளிமையான முறையில் நெருங்கிய உறவுகள், நண்பர்கள் முன்னிலையில் நடந்தது ஆலியா- ரன்பீரின் திருமணம். அதற்கு பிறகு இவரது திரைப்பயணமும் எந்த சலனமும் இல்லாமல் தொடர்ந்தே வருகிறது.

இப்படி இருக்கையில், திருமணமாகி மூன்று மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில் தங்களது குழந்தை விரைவில் வரப்போகிறது எனக் குறிப்பிட்டு, கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராமில் ஆலியா பட் புகைப்படத்தோடு பதிவிட்டு அறிவித்திருக்கிறார்.

அந்த படம்தான் தற்போது இன்ஸ்டா, ட்விட்டர், ஃபேஸ்புக் என அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாகியுள்ளது. ஆலியா-ரன்பீர் தம்பதிக்கு பிரபலங்கள் தொடங்கி பலரும் தங்களது வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.

ஆலியா, ரன்பீர் தம்பதி நடித்திருக்கும் பான் இந்தியா படமான பிரமாஸ்திரா வருகிற செப்டம்பர் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.